சென்னை: சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்களை அவதூறாக பேசுதல் மற்றும் அரசுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக தமிழகம் முழுவதும் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல்துறை ஆணையர் மே 12-ஆம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய சவுக்கு சங்கர் தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் தரப்பில், அவசரகதியில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஒரே பேட்டியை மையமாக வைத்து குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பரப்பி வந்தார் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசு தரப்பில், "அனைத்து பெண் காவலர்களையும் சவுக்கு சங்கர் தவறாக கருத்து தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிராக அவதூறாக பேசக்கூடாது என கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து அரசுக்கு எதிராக பேசியதால், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "யூடியூப்களில் கருத்து தெரிவிக்கும் அனைவரும் கைது செய்யப்படுகிறார்களா? இதுவரை எத்தனை பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ வெளியிட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என எந்த அடிப்படையில் அரசு முடிவுக்கு வந்தது?. யூடியூப்களில் வெளியிடப்படும் கருத்துக்களை நம்புவது மக்களின் தனிப்பட்ட விருப்பம். அது சரியாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். நல்ல எண்ணம் கொண்டவர்கள் நல்ல வீடியோக்களை பார்ப்பார்கள், தவறான எண்ணம் கொண்டவர்கள் தவறான வீடியோக்களை பார்ப்பார்கள். அதனால், எந்த வீடியோவை பார்க்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது"
நீதிமன்றம் சரமாரி கேள்வி: "தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் செய்திகள் அனைத்தும் உண்மையா? தொலைக்காட்சி சார்ந்த கட்சிகளுக்கு தானே சாதகமாக நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதை ஏன் கேட்க முடிவதில்லை? திரைப்படங்களில் ஏன் அரிவாள் கத்திகளுடன் காட்சிகள் வெளியிடுகின்றன. சமுதாயத்திற்கு தேவையான தத்துவத்தையா? காட்சிப்படுத்துகின்றன"