தமிழ்நாடு

tamil nadu

எந்த அதிகாரத்தின் அடிப்படையில் உண்மைக் கண்டறியும் குழு ஈஷாவிற்குள் நுழைந்தது? - நீதிபதி கேள்வி! - ISHA YOGA CREMATORIUM ISSUE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 9:36 PM IST

Madras High Court: கோவை ஈஷா யோகா மையத்திற்குள் அத்துமீறி நுழைந்த பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் முட்டத்துவயலில் உள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில், மின்சார தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில், சுப்ரமணியன் என்பவர் இந்த தகனமேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணையின்போது இந்த மின்சார தகனமேடையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, இந்த மின்மயான கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பு இல்லாத நபர்கள் யாரும் நுழையக்கூடாது என கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் 14ஆம் தேதி பெரியார் திராவிடர் கழகத்தினர் தன்னிச்சையாக 'உண்மை கண்டறியும் குழு' என்ற பெயரில் ஈஷாவிற்குள் செல்ல முயன்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஈஷாவிற்குள் செல்ல முயன்ற தங்களை தடுத்து நிறுத்தி தாக்கியதாக, பெரியார் திராவிடர் கழக ராமகிருஷ்ணன் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.

ஈஷா தன்னார்வலர்கள் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரம், ஈஷாவிற்குள் நுழைய முயன்றவர்களை தடுத்தபோது தங்களை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக 5 கிராம பொதுமக்களும் புகார் அளித்தனர். அந்தப் புகார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ஈஷா தன்னார்வலர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஈஷா மின் மயான கட்டுமானப் பகுதிக்குள் நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளே நுழைய முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஈஷாவிற்குள் நுழைந்தனர் என்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கு; மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்! - Kallakurichi Hooch Tragedy

ABOUT THE AUTHOR

...view details