தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் 2024: திமுக vs அதிமுக; இருமுனைப் போட்டியில் ஈரோடு தொகுதியை கைப்பற்ற போவது யார்? - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 7:56 PM IST

Updated : Jun 3, 2024, 10:02 PM IST

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

ஈரோடு தொகுதி வேட்பாளர்கள்
ஈரோடு தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு:ஈரோடு மாவட்டம் விசைத்தறிகள், ஜவுளித் துறை மற்றும் மஞ்சள் விவசாயத்தில் சிறந்த விளங்குகிறது. மேலும் இங்கு நீர் ஆதாரமாகக் காவிரி ஆறு, கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் கால்வாய்கள் உள்ளன. ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பெயர் பெற்ற காங்கேயமும், காற்றாலைகள், கண்வலிகிழங்கு மற்றும் முருங்கை பவுடர் உற்பத்தியில் தமிழகத்தின் முன்னணி ஊராக திகழும் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகள் ஈரோடு மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளன. திராவிட இயக்கம் தோன்றுவதற்கு காரணமான பெரியார் பிறந்த ஊர் என்ற பெருமையும் ஈரோட்டுக்கு உண்டு.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி ஈரோடு கிழக்கு , ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குமாரபாளையம், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கேயம், தாராபுரம் (தனி) என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முன்பு திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியாக இருந்து தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு, 2009ஆம் ஆண்டு முதல் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியாக உள்ளது.

2019 தேர்தல் வாக்குப்பதிவு விபரம்:2019 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் மொத்தம் 10,53,068 வாக்குகள் பதிவாகின. திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி 5,63,591 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மணிமாறன் 3,52,973 வாக்குகளும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணக்குமார் 47,719 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி 39,010 வாக்குகளும் வாங்கினர். இதில், மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, அதிமுக வேட்பாளரான மணிமாறனை விட 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2024 தேர்தல் வாக்குப்பதிவு விபரம்:ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2,30,448 வாக்காளர்களும், ஈரோடு மேற்கு தொகுதியில் 2,95,732 வாக்காளர்களும், மொடக்குறிச்சி தொகுதியில் 2,27,935 வாக்காளர்களும், தாராபுரம் தொகுதியில் 2,58,786 வாக்காளர்களும், காங்கேயம் தொகுதியில் 2,59,652 வாக்காளர்களும், குமாரபாளையத்தில் 2,55,689 வாக்காளர்களும் உள்ளனர்.

மொத்தமாக தற்போது, ரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 7,44,927 ஆண் வாக்காளர்களும், 7,93,667 பெண் வாக்காளர்களும், 184 மூன்றாம் வாக்காளர்களும் என மொத்தம் 15,38,778 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 10,86,287 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 70.59.

கள நிலவரம் என்ன?:ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவும், திமுகவும் சமபலத்துடன் உள்ளன. மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்ற மொடக்குறிச்சி தொகுதியும் ஈரோடு மக்களவைத் தொகுதியில் தான் உள்ளது. தமிழகத்திலேயே அதிக பணம் மற்றும் சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனு தாக்கலின்போது தெரிவித்திருந்த அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடும் தொகுதியாகவும் ஈரோடு உள்ளது.

இந்தத் தொகுதியில் கடந்த முறை மதிமுக வேட்பாளர் திமுக சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை திமுக நேரடியாக வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, திமுக வேட்பாளர் பிரகாஷ், அதிமுக வேட்பாளர். ஆற்றல் அசோக்குமார். பாஜக கூட்டணிக் கட்சியான தமாகா சார்பாக விஜயகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகன் உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர்.

திமுக:ஈரோடு மக்களவைத் தொகுதி உருவான பின், திமுக கூட்டணியிலுள்ள மதிமுக இங்கு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போது திமுக நேரடியாகவே களம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக:பாரதிய ஜனதா கட்சியிலிருந்த ஆற்றல் அசோக்குமார், உட்கட்சி பூசல் காரணமாக பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து, தேர்தலில் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமாகா:ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பாஜகவை சேர்ந்த சரஸ்வதி உள்ளார். இதன் காரணமாக, ஈரோடு மக்களவைத் தொகுதியில் பாஜகவிற்கு கணிசமான வாக்குகள் உள்ளதாக ககுதப்படும் நிலையில், அக்கூட்டணியில் களமிறங்கி உள்ள தமாகாவுக்கு இத்தேர்தலில் கணிசமான வாக்குகல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று நாம் தமிழர் கட்சிக்கும் இங்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் உள்ளன.

வெற்றி யாருக்கு?:2019 மக்களவைத் தேர்தலில்திமுக கூட்டணியிருந்த மதிமுக திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை இங்கு திமுக நேரடியாக போட்டியுள்ளது. அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி இருக்கும் தொகுதியாகவும், பாஜகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ள தொகுதியாகவும் ஈரோடு உள்ளது. இம்முறை மும்முனைப் போட்டி நிலவும் ஈரோட்டில் வெற்றி சுவடை பதிக்கப் போவது யார் என்பது ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க:2024 நாடாளுமன்றத் தொகுதி வெற்றி விபரத்தை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளுங்கள்...

Last Updated : Jun 3, 2024, 10:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details