தமிழ்நாடு

tamil nadu

திருபுவனத்தில் முதன்முறையாக பெண்களே யாக பூஜைகள், தமிழில் கும்பாபிஷேகம் செய்த விழா! - Thirubuvanam Tamil Kumbabishekam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 6:55 PM IST

Thirubuvanam Tamil Kumbabishekam: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் உள்ள ஆதிசக்தி ஞானபீடம் கோயிலில் முதன்முறையாக பெண்களே யாக பூஜைகள் செய்து, தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

பெண்கள் நடத்திய கும்பாபிஷேம்
பெண்கள் நடத்திய கும்பாபிஷேம் (Credits- ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்:தஞ்சாவூரில்கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் திருபுவனத்தில் இந்தியப் பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் சார்பில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

தமிழ் நடைமுறைபடி நிகழ்ந்த கும்பாபிஷேகம் விழா (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த கும்பாபிஷேகம் பச்சை ஆடையுடன் 60 பெண்களால் நடத்தப்பட்டு, யாகசாலை பூஜைகளுடன் நிறைவு பெற்றது. திருபுவனம் இந்திரா நகரில் அமைந்துள்ள சித்தர்களின் தலைவி ஆதிசக்தி ஞானபீடம் மற்றும் பதினெண் சித்தர்கள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், வாலைக்குமாரி, ஸ்ரீலஸ்ரீ மூட்டைசுவாமிகள் அருள்கூடம ஆகியோருக்கு மஹா கும்பாபிஷேகம் தமிழ் சித்தர் கண்ணன் அடிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதற்காக கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி மாலை தொடங்கிய யாக சாலை பூஜைகள். முதல் நான்கு கால பூஜைகளும், தமிழ் மந்திரங்கள் ஓதி பச்சை ஆடை உடுத்திய 60 பெண்களே நடத்தினர். உழவுத் தொழிலின் குறியீடாம் பச்சை ஆடை உடுத்தி பெண்கள் கோயிலின் கருவறைக்கு சென்று அவர்களது கரங்களால் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்தனர்.

பின் சித்தர்கள் போற்றும் பஞ்சப்பூதங்களைக் குறிக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் வடிவங்கள் வேள்வி குண்டங்களாக அமைக்கப்பட்டு இருந்தன. சாதி, சமய, இன பேதமின்றி அனைவரும் கருவறைக்குள் செல்ல அனுமதியும், தமிழ் மந்திரங்கள் ஓத அனுமதியும் தமிழ் சித்தர் கண்ணன் அடிகளால் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே முதன்முறையாக பெண்களே யாகசாலைகள் பூஜைகள் நடத்தி கலசத்திற்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பழனி கிரிவலப்பாதை; அப்புறப்படுத்தாமல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details