தமிழ்நாடு

tamil nadu

"தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் ரூ.20,000 கோடி சிறப்பு நிதி" - பாஜக தலைவர் சொல்லும் லாஜிக் இதுதான்! - K P Ramalingam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 8:09 PM IST

Tamil Nadu BJP Vice President K P Ramalingam: சேலத்தை தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் 20,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர தமிழக பாஜக தயாராக உள்ளது என்று தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் அதிரடியாக கூறி உள்ளார்.

கே.பி.ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பு
கே.பி.ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம்: சேலத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆந்திரா மற்றும் தெலங்கானா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கே.பி.ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், ஆந்திரா மாநிலத்திற்கு தலைநகராக அமராவதியை உருவாக்கிட மத்திய அரசு நிதி வழங்கும் என ஏற்கெனவே அறிவித்தது. இந்த நிலையில்தான், ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதி என்று அம்மாநில முதலமைச்சர் முடிவு செய்ததால் அவர்களுக்கு சிறப்பு நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. இதைக்கூட புரிந்து கொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என்று பேசி வருகிறார்.

சேலத்தை தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் 15 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல 20,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக நாங்கள் வழங்கத் தயாராக இருக்கிறோம். முதலமைச்சர் அதை உருவாக்க தயாரா? தமிழ்நாட்டில் 234 சட்டசபைத் தொகுதிகளை வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. 134 தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாநிலமும், 100 தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாநிலம் என்று இருந்தாலே ஆட்சியை சிறப்பாக நடத்தலாம்.

இவருக்கு ஒரு மகன் மட்டுமே உள்ளதால் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கத் தயங்குகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். சேலத்தை தலைநகராகக் கொண்டு தமிழகம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. அப்படி பிரித்தால் புதிதாக தலைநகர் உருவாவதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் பெற்றுத்தர தமிழக பாரதிய ஜனதா தயாராக உள்ளது.

தமிழகம் முழுவதும் நாள்தோறும் கொலை கொள்ளை என்று குற்றச் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. மேலும், கூலிப்படை தலைவர்களும் அதிகரித்துள்ளனர். பணத்திற்காக கொலை செய்யும் நபர்கள் அதிகளவில் தமிழகத்தில் உருவாகியுள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு நிதி அறிவிப்பு வழங்கவில்லை என்று கூறும் தமிழக அரசு ஏற்கெனவே இரண்டு முறை நிதி வழங்கியதற்கான கணக்குகளை வழங்க தயாராக உள்ளதா? கணக்கு கேட்பார்கள் என்று பயந்துதான் தமிழக முதலமைச்சர் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்திற்குச் செல்லாமல் ஒவ்வொரு முறையும் தவிர்த்து வருகிறார்" என்று கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆய்வின்போது மிஸ் ஆன கலெக்டர்.. போன் போட்டு கடிந்த அமைச்சர்.. நெல்லையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details