கன்னியாகுமரி: ஈத்தாமொழி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், கார் அடியில் சிக்கிய பள்ளி மாணவனை, கார் இழுத்துச் சென்றுள்ளது. மேலும் கார் தீப்பிடித்ததால், காரில் சிக்கிய மாணவன் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். இது குறித்து, சுசீந்திரம் காவல் நிலையம் மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் துரதிஷ்டவசமாக இருசக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன் தீயில் கருகி உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மற்றும் சுசீந்திரம் போலீசார், காரில் சிக்கி உயிரிழந்த சிறுவன் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அடுத்த ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கார் ஓட்டுநரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், கன்னியாகுமரி, ஈத்தாமொழியை தெற்குபால் கிணற்றான் விளையைச் சேர்ந்தவர் கோபி (39). ஈத்தாமொழி மற்றும் கன்னியாகுமரியில் பெயிண்ட் கடை நடத்தி வரும் இவர், நேற்று விடுமுறை என்பதால் மனைவி லேகா (30) மற்றும் குழந்தைகளுடன் சங்குதுறை கடற்கரைக்கு புறப்பட்டுள்ளனர்.
கார் ஈத்தாமொழி செம்பொன்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த நிலையில், காரின் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் காரின் முன் பகுதியில் இருசக்கர வாகனமும், அதை ஓட்டி வந்த சிறுவனும் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். இதனையடுத்து, காரின் முன்பகுதியில் சிறுவனும், இருசக்கர வாகனமும் சிக்கியிருப்பதை அறியாத கோபி காரை வேகமாக ஓட்டியுள்ளார்.