கன்னியாகுமரி:திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வந்தது. 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த நவராத்திரி விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டு அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம் செல்லும் 3 சாமி சிலைகள்:அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் பல்லக்கில் சுமந்து ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். அங்கு 10 நாட்கள் நவராத்திரி விழாவில் பூஜைகளில் பங்கேற்ற பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்.
உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி:ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா குமரி மாவட்டத்தில் முக்கிய விழாவாக விளங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வரும் 3 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்காக சுசீந்திரம் முன்னு தித்தநங்கை அம்மன், குமாரகோவில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள மன்னர் மார்த்தாண்டவர்மாவின் உடைவாளை எடுத்து, கேரள அறநிலையத்துறை அமைச்சர் வாசவன் முன்னிலையில் கேரள தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமசந்திரன் குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் பழனி குமாரிடம் ஒப்படைத்தார்.