கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையில் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது என்பவர் "ஜனநாயகம் இறந்து விட்டது" எனக் குறிப்பிடும் வகையில், சவப்பெட்டியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவரை 200 மீட்டருக்கு முன்பு தடுத்து நிறுத்திய போலீசார், சவப்பெட்டியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அவரை மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வருமாறு அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த அவர், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நூர் முகமது, 1996ஆம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருவதாகவும், 1997ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும், மாமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்பு மனுத் தாக்கல் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.