விழுப்புரம்:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் வரும் 27ம் தேதி வரை பெறப்படுகிறது. அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இதுவரை யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாத நிலையில், அரசன் என்ற முதியவர் சுயேட்சை வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியைச் சேர்ந்த முதியவர் அரசன், நாடாளுமன்ற தொகுதிக்கு சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். நான்காவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறும் அரசன், நான்கு முறை சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
மேலும், நான்கு முறை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் போட்டியிட்டு உள்ளார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதை லட்சியமாகக் கொண்டு உள்ளதாக அரசன் தெரிவித்துள்ளார். கல்வியறிவு தனக்கு முற்றிலும் இல்லை என்று கூறும் அவர், தான் நீண்ட நாட்களாக விவசாயக் கூலியாக வேலை செய்து வந்ததாகவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடைந்து என் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்கிறார்.