விருதுநகர்:பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கிய பெண்ணின் உடைகள் அனைத்தும் தீயில் கருகிய நிலையில், படுகாயமடைந்த அவரை ஆடையின்றி தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அப்போது அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுக்கிரவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவி பாண்டியம்மாளின் கணவர் மாரீஸ்வரன் தான் அணிந்திருந்த லுங்கியை அவிழ்த்து அவர் மீது போர்த்தியுள்ளார். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட பட்டாசு அறைகள் உள்ளன. இன்று வழக்கம் போல 50 மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் இந்த ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (மே.09) பிற்பகல் இந்த பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இதன் அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த திருத்தங்கல், வடமலாபுரம், சோரம்பட்டி, அதிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் குவிந்தனர்.