சென்னை: தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்ளிட்ட காரணங்களுக்காக, பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஆதரவாக மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டப்பட்டிருப்பதாகவும், கோவை சிறையில் அவரது கையை உடைத்து சித்தரவதை செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது குண்டர் சட்டம் ஏவியுள்ளது குறித்து உயர் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் அந்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், "தற்போது போலீசார் அவர் மீது கோவை, தேனி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7 வழக்குகள் போட்டுள்ளனர். இன்னும் பல வழக்குகள் போட்டு வருகின்றனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் மீது 10க்கும் மேற்பட்ட சிறைக் காவலர்கள் இருட்டு அறையில் அடைத்து தாக்கிச் சித்தரவதைச் செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து சவுக்கு சங்கர் நீதித்துறை நடுவரிடம் புகார் கூறியதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதென்றும், சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தன்னைத் தாக்கியதாகவும் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்" எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் போன்றவற்றில் சவுக்கு சங்கர் அரசுக்கும், காவல்துறைக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் வெளிப்படையாக ஆதரவாக செயல்பட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஊடகத்தை வைத்துக் கொண்டு உள்நோக்கத்தோடு தவறான, பொய்யான கருத்துகளைத் தெரிவிக்கும்போது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைவிடுத்து சவுக்கு சங்கர் மீது தமிழக அரசும், காவல்துறையும் குண்டர் சட்டத்தை ஏவுவது போன்ற அடக்குமுறையை ஏவுவது கண்டிக்கத்தக்கது. சவுக்கு சங்கர் காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்த வழக்கை நடத்தி அவருக்குச் சட்டப்படி தண்டனைப் பெற்றுத் தருவதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.