தமிழ்நாடு

tamil nadu

நீலகிரியில் கனமழை; வீடுகளுக்குள் மழைநீர்.. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! - NILGIRIS RAIN

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 5:22 PM IST

Updated : Jun 29, 2024, 9:32 PM IST

Nilgiris heavy rain: நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், இப்பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நீலகிரி ஆட்சியர் ஆய்வு
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நீலகிரி ஆட்சியர் ஆய்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மூன்று நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இதன்படி, இன்று காலை 8.30 மணி வரை 1029 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதில், அதிகபட்சமாக பந்தலூர் பகுதியில் 278.80 மிமீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் ஆய்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

ப‌ல்வேறு பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனிடையே கூடலூர், தேவாலா உப்பட்டி டவர் அருகில் ஏற்பட்ட மண்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்தது. உடனே நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மண் சரிவின் போது காரில் பயணம் செய்த மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

மண்சரிவால் சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு பாதிப்பு அடைந்த பகுதிகளை சீரமைத்து வருகின்றனர். இதனிடையே, ஆற்றுப் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பந்தலூர் நகராட்சி செம்மண் வயல் பகுதிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மற்றும் நெல்லியாளம் நகராட்சி ஆணையர் முனியப்பன், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், கூடலூர் வட்ட வளர்ச்சி அலுவலர் சலீம், பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்போது நிலக்கோட்டை ஊராட்சி வட்டகெல்லி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் அறிவுரை: நிலக்கோட்டை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆறுகளை கடந்து செல்லவோ, ஆற்றங்கரையோரம் நின்று செல்போனில் வீடியோ பதிவு செய்யும் செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம்.

சாலைகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், மின் கம்பங்கள் சாலையில் விழுந்தால் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி உள்ளது.

இதையும் படிங்க:இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் பட்டியல் வெளியீடு- எந்த மாநிலத்தில் அதிக இறப்பு தெரியுமா?

Last Updated : Jun 29, 2024, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details