தமிழ்நாடு

tamil nadu

மும்பை போல் மாறிய சென்னை.. மின்சார ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்! - Chennai Suburban Railway

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 1:06 PM IST

TAMBARAM RAILWAY MAINTENANCE: தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகின்றது.

தாம்பரம் ரயில் நிலையம்
தாம்பரம் ரயில் நிலையம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் ஆகஸ்ட் 3ஆம் தொடங்கியது. இந்த பணிகள் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் மற்றும் இரவு 10 முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் ரயில் நிலையம் (Credits- ETV Bharat Tamil Nadu)

இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைக் கருத்தில் கொண்டு பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகள், கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகள், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 70 பேருந்துகளை கூடுதலாக மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.

இருப்பினும் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக இன்று (சனிக்கிழமை) தாம்பரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, வண்டலூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் காலை முதலே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையிலிருந்து பல்லாவரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் காலை 9.30 மணி வரை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏறுவதற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் மக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பலருக்கும் இருக்கை கிடைக்காமல் ரயிலில் உள்ளே நின்றபடியே பயணம் மேற்கொண்டனர்.

இதே போல் பல்லாவரம் ரயில் நிலையத்திலும் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் பல்லாவரத்தில் ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்வதற்கு எஸ்கலேட்டர்கள் ( தானியங்கி நடப்பாதைகள்) இல்லாததால் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்று மற்றொரு நடைபாதைக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:“செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் உள்ளது”.. ஷோபா கரந்தலஜே தரப்பு வாதம்!

ABOUT THE AUTHOR

...view details