தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருத்தி நூல் முதல் பட்டு வரை.. தீபாவளி விற்பனையில் களைகட்டும் கைத்தறி சேலைகள்!

தீபாவளியை முன்னிட்டு சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் கைத்தறி நெசவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கைத்தறி சேலைகள், நெசவாளர் மோகன்
கைத்தறி சேலைகள், நெசவாளர் மோகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ஈரோடு: தமிழ்நாட்டு பெண்களின் பாரம்பரிய உடை கைத்தறி புடவைகள் தான். கைத்தறி சேலைகள் பருத்தி மற்றும் பட்டு நூல்களால் தயாரிக்கப்படுகிறது. பட்டு நூலில் கைத்தறி நெசவு மூலம் நெய்யப்படும் சேலைகள் நீடித்து உழைப்பதால் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் பட்டுச்சேலைகளை விரும்பி அணிவது வழக்கம்.

பருத்தி நூலில் நெய்யப்படும் சேலைகள் விலை குறைவாகவும், உடுத்துவதற்கும் சௌகரியாகவும் இருப்பதால் இளம் வயது பெண்கள் முதல் மூதாட்டிகள் வரை அனைவரும் பருத்தி சேலைகளை விரும்பி அணிகின்றனர். அது மட்டுமின்றி கட்டியவுடன் ஒரு ரிச் லுக் கிடைப்பதால் பருத்தி சேலைகளை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கலெக்டர்கள், அலுவலகம் செல்லும் பெண்களும் விரும்புகின்றனர். இத்தகைய புகழ் வாய்ந்த பெண்களை கவரும் சேலைகள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் கைத்தறியில் தயார் செய்யப்படுகிறது.

நெசவாளர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

நெசவு தொழில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான கைத்தறி சேலைகளை வித விதமாக வண்ணமயமாக இங்கு நெய்து கொடுக்கின்றனர்.

குறிப்பாக கைத்தறி பட்டு சேலைகள் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. கைத்தறி சேலைகளை நெய்து தறியில் அறுத்து எடுக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் மற்றும் சுபமுகூர்த்த காலங்களில் கைத்தறி சேலைகளின் தேவை அதிகமாக இருப்பதால் அப்போது அதிகமாக தயாரிக்கின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை மற்றும் முகூர்த்த சீசனுக்கு ஆர்டர்கள் அதிகம் வருவதால் கடந்த சில வாரங்களாக நெசவுத்தொழில் விறுவிறுப்படைந்து உள்ளது.

தரமான சாயம் போகாத வகையில் பட்டு நூல்களை கொண்டு கைத்தறி சேலைகள், ஜரிகை வேலைப்பாடுகளுடன் சேலைகள் தயார் செய்யப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி நெசவாளர்கள் கைத்தறி சேலைகள் தயார் செய்து தமிழகத்தின் பிரபல ஜவுளி கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். மேலும் இந்த கைத்தறி சேலைகள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

சேலைகளில் கோரா காட்டன், சாப்ட் சில்க்ஸ், கோட்டா காட்டன், கும்கி, தளபதி புட்டா, டெக்னிகல் புட்டா, பாபி புட்டா, மினி புட்டா, ஆச்சி பார்டர், ரமணா கட்டம், ராஜா ராணி கட்டம், லாங் பார்டர், மயில் பேடு கட்டம் போன்ற ஏராளமான டிசைன்களில் அனைத்து நிறங்களிலும் நெய்யப்படுகின்றன. கைத்தறி சேலைகள் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து துவங்கி 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

விலை குறைவாகவும், வண்ணமயமாகவும் இருப்பதால் புஞ்சை புளியம்பட்டி சேலைகளுக்கு நல்ல மவுசு இருந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் ரக சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதையும் படிங்க:கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய படிப்புகள் - அரசு அனுமதி!

செயற்கை, பாலிஸ்டர் நூலிழைகளால் சேலை ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்டாலும், கைத்தறியில் நெய்யப்படும் சேலைகளுக்கு என்றுமே வரவேற்பு குறைவதில்லை.

கைத்தறி நெசவாளர் மோகன் குமார் கூறுகையில், ”வீட்டில் சில சமயங்களில் கஷ்டமான நிலைமை ஏற்படலாம். வீட்டில் இடப்பற்றாக்குறை இருக்கும். மழை பெய்தால் கைத்தறி நெசவு செய்ய முடியாது. ஆனால் இந்த குடோனில் வேலை பார்ப்பதால் நிம்மதியாக வேலை பார்க்க முடிகிறது. மனதில் திருப்தி ஏற்படுகின்றது. இதனால் தரமான சேலைகளை செய்ய முடிகிறது. ஜரிகை வைத்து சாப்ட் சில்க் சேலைகளை நெய்கிறோம்” என்றார்.

கைத்தறி நெசவு கம்பெனி நடத்தி வரும் ரகுராம் கூறுகையில், “நான் படித்து முடித்துவிட்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிய விரும்பினேன். அதன் பின் எனது அப்பாவின் அறிவுரையின் பேரில் 10 தறிகளுடன் கைத்தறி நெசவு ஆலையை ஆரம்பித்தோம். தற்போது 50 தறிகள் உள்ளன.

கோரா காட்டன், சாப்ட் சில்க்ஸ், பனாரஸ், சில்க் காட்டன், காஞ்சிபுரம் சேலைகள் ஆகிய வகை சேலைகளை இங்கு நெய்கிறோம். 2 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலான சேலைகளை தயாரிக்கிறோம். கைத்தறி நெசவை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. கைத்தறி சேலைகளுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது” என்றார்.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வெளியூர்களில் இருந்து சேலைகள் கொள்முதல் செய்யவும், ஆர்டர் கொடுக்கவும், வியாபாரிகள் பலர் இங்கு வந்து செல்கின்றனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட்களை கொள்முதல் செய்து பட்டு சேலைகளை நெசவு செய்து வருவதாகவும், ஒரு சேலைக்கு ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details