தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 8:21 AM IST

ETV Bharat / state

திருச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி வரை மோசடி.. அரசு அலுவலர்கள் உடந்தையா?

Government Job Fraud in Trichy: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 11 பேரிடம் சுமார் 1 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்த நபர்களை கைது செய்ய வேண்டும் என திருச்சி டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடி வரை மோசடி செய்த நபர்களை பிடிக்க திருச்சி டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்!
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடி வரை மோசடி செய்த நபர்களை பிடிக்க திருச்சி டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்!

திருச்சி: புதுக்கோட்டை திருமயம், பெருங்குடி வலையம்பட்டியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் முத்துகுமார் (33). இவர் திருச்சி சரக டி.ஐ.ஜி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், “அரசு வேலைக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தேன்.

அப்போது என்னை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், அரசு வேலை தருவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள டி.ஆர்.ஓ அலுவலகத்திற்கு வரச் சொன்னார். அந்த அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த கௌரிசங்கர், உஷாராணி என்பவர்கள், அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று கூறி, என்னிடம் இருந்து ரூ.6.5 லட்சத்தை பெற்றுக் கொண்டனர்.

பின்னர், இது தொடர்பாக இளையராஜா என்பவர் என்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார். பின்னர், நீர்வளத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள அலுவலர்களை அறிமுகப்படுத்தி வைத்து, கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்தார்.

அதனைத் தொடர்ந்து, அரசு முத்திரையிட்ட பணி நியமன அரசாணையையும் வழங்கினார். அரசாணை வழங்குவதற்கு முன்பாக, அங்குள்ள 5 அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறி, என்னிடம் ரூ.25 லட்சம் ரொக்கப் பணத்தை வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக் கொண்டார்.

இவ்வாறு அரசு அலுவலர்களுடன் உள்ள தொடர்பை பயன்படுத்தி நீர்வளத்துறை, வருவாய் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் வேலை வாங்கித் தருவதாக தனசேகர், ஆனந்த பாலகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோரிடமும் பணம் பெற்று, அரசு அடையாள அட்டை, பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளனர். அதன் பின்னர், மாவட்ட வருவாய் நீதிமன்ற அலுவலகத்தில் நடைபெறும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைவரையும் அழைத்தனர்.

அங்கு சென்றபோது, பயிற்சிக் கட்டணம் என்று கூறி, எங்களிடம் இருந்து மேலும் ரூ.1.30 லட்சம் பெற்றுக் கொண்டனர். மேலும், நியமன ஆணை மற்றும் ஐ.டி.கார்டை வாங்கிக் கொண்ட அவர்கள், பயிற்சி வகுப்பு தேதி மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி எங்களை அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. அவர்களை தேடிச் சென்றபோது தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது.

சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்குச் சென்று நாங்கள் விசாரித்தபோது, அங்கு எந்த பணி நியமனமும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. எங்களைப் போன்று 11 பேரிடம் சுமார் ரூ.1 கோடி அளவிற்கு பண மோசடி செய்துள்ளனர். எனவே, இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அவர்களிடம் தொடர்பு வைத்துள்ள அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மனு அளித்தவர்கள் கூறும்போது, "அரசு அலுவலர்களுடன் உள்ள தொடர்பின் காரணமாகவே, அந்தந்த அரசு அலுவலகத்திற்கு எங்களை அழைத்துச் சென்று, அலுவலக நடவடிக்கைகளை காண்பித்தும், அரசு அலுவலர்களை அறிமுகப்படுத்தியும், பின்னர் எங்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டனர். அரசு அலுவலர்களைச் சென்று கேட்டால், ஒரு நாளக்கு ஆயிரம் பேர் வருகிறார்கள். அனைவரையும் எங்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என பதில் கூறுகின்றனர்” என்ற வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:காதலர் தினம் 2024; பதாகைகளை ஏந்தி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி!

ABOUT THE AUTHOR

...view details