சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரி சங்கர் ஆகியோர் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள ஆசிரியர்கள் - அரசுப் பணியாளர்களுக்கு IFHRMS என்ற மென்பொருள் மூலமாக சம்பளப் பட்டியல்கள் பெறப்பட்டு, மாதாந்திர சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதில், புதிய நடைமுறையாக இந்த நிதியாண்டு முதல், வருமான வரிப் பிடித்தமானது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் (IFHRMS) மூலமாக கணக்கிட்டு பிடித்தம் செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், பணியாளர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில், பழைய நடைமுறை அல்லது புதிய நடைமுறை (Old Regime / New Regime) எனத் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். இதனைத் தேர்வு செய்யாத பணியாளர்களுக்கு New Regime என்ற அடிப்படையில் வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நடைமுறையில் பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது தான் யதார்த்தம். தாங்கள் தேர்வு செய்த விருப்பத்தின் அடிப்படையில், வருமான வரிப் பிடித்தம் செய்யாமல், அளவுக்கு அதிகமாக சில பணியாளர்களுக்கு அனைத்து பிடித்தங்களையும் கழித்துவிட்டு, அவர்கள் வாங்கும் மாதாந்திர ஊதியத்தினை விட அதிகமாக வருமான வரிப் பிடித்தம் செய்யும் நிலை எழுந்துள்ளது.
வரி விலக்கு பெற்ற பல்வேறு இனங்களை, உதாரணமாக வீட்டுக் கடன் அசல், வட்டி உள்ளிட்டவற்றைக் கூட பதிவேற்றம் செய்வதற்கான உரிய வசதிகள் IFHRMS மென்பொருளில் செய்யப்படவில்லை. இதுநாள் வரை, இனிமேலும் வருமான வரிப் பிடித்தம் செய்யும் வரம்பிற்குள் வராத அடிப்படைப் பணியாளர்களுக்குக் கூட அதிக அளவில் வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது.