சேலம்:விமான நிலைய விரிவாக்கத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று (மார்ச் 6) கலந்துரையாடல் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் 4 கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், விமான நிலைய விரிவாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அரசிடம் தங்களது எதிர்பார்ப்பு குறித்தும் அப்பகுதியில் வசிக்கும் 4 கிராம மக்கள் ஜி.கே.வாசனிடம் விளக்கிப் பேசினர். இதனையடுத்து, கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், “இப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகள், மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், "விமான நிலைய விரிவாக்கத்திற்காக அதிகாரிகள் சிலர் மக்களை மிரட்டுவது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே உள்ள மாற்று இடத்தில் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். மேலும், நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது அக்கறை கொண்ட அரசாக மத்திய அரசு உள்ளது” என்றார்.
தமிழகத்தில், பிரதமரின் தொடர் வருகையால் எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “பிரதமர், நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்ந்து சென்று, மாநிலத்தில் எந்த ஆட்சி இருந்தாலும், நாட்டின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய்க்கு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காழ்ப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டான ஆட்சியாகவும், கட்சியாகவும் திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.