சென்னை: குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் படித்து வரும் 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 மாணவர்களுக்கு 383.59 கோடி ரூபாய் நிதி பள்ளிகளுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கையானது தமிழகத்தில் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
2013-2014 ஆம் ஆண்டு முதல் இந்த சேர்க்கை தொடங்கப்பட்டு, 2017-2018 ஆம் கல்வி ஆண்டு முதல் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணைய வழியாகப் பெறப்பட்டு தற்போதுவரை சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கையின் கீழ் பயிலும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத் தொகையாக 364.44 கோடி ரூபாய் அனைத்துப் பள்ளிகளுக்கும் நிலுவை இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.