தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 3:57 PM IST

Updated : May 12, 2024, 5:17 PM IST

ETV Bharat / state

யானைகள் வழித்தடத்தில் பூர்வகுடிகளா? தருமபுரி சம்பவத்தில் வனத்துறையின் பதில் என்ன? - DHARMAPURI TRIBAL ISSUE

DHARMAPURI TRIBAL ISSUE: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப்பகுதியில் இருந்த மீனவர்களை, வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வனத்துறைக்கும் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்பான புகைப்படம்
வனத்துறைக்கும் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்பான புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

பாதிக்கப்பட்ட மக்களின் பேட்டி (Video Credit - ETV Bharat Tamil Nadu)

தருமபுரி:தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களை வனத் துறையினர் வெளியேற்றீ வருகின்றனர். பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர், சிங்காபுரம், ஒகேனக்கல், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும் கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் உள்ளிட்டடோரை வனத்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஒகேனக்கல் அருகே உள்ள எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு ஆகிய பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர்.

கடந்த ஐந்து தலைமுறைகளாக குடியிருந்து வரும் அவர்களை, வனப்பகுதி நிலத்தில் குடியிருப்பதாகக் கூறி வனத்துறையினர் அடிக்கடி அவர்களை தொந்தரவு செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கடந்த சில மாதங்களாக வனத் துறையினர் நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 10க்கும் மேற்பட்ட வனத் துறையினர் பொதுமக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வனத்துறையினர் வீடுகளின் கூரைகளைப் பிரித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால் வனத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் பெண்கள் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இரவோடு இரவாக வந்த வனத் துறையினர், அப்பகுதியில் மூன்று வீடுகளின் மேற்கூரைகளை அடித்து உடைத்து, இடித்து தள்ளியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து இரவு வந்து பார்த்தவர்கள், வீடு இடிந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நேற்று இரவு பென்னாகரம் ஒகேனக்கல் பகுதியில் கன மழை பெய்ததால், வீட்டிலிருந்த உணவுப் பண்டங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், "நாங்கள் 3 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். மீன் பிடித் தொழிலை விட்டால் எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதியில் எங்களை வெளியேறும்படி வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளானர். பல தலைமுறைகளாக இங்கே வசித்து வருகிறோம். அதனால் தங்களுக்கு காவிரி ஆற்றங்கரை பகுதியிலேயே இடம் ஒதுக்கிக் கொடுத்தால் வசதியாக இருக்கும்.

அதை விடுத்து பென்னாகரம் பகுதியில் இடம் ஒதுக்கினால், தங்களால் இரவு நேரங்களில் மீன் பிடிக்க வருவதற்கு மிகுந்த சிரமமாக இருக்கும். எனவே, காவிரி ஆற்றுப் பகுதியிலேயே ஊட்டமலை, ஆலம்பாடி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளில் இடத்தை ஒதுக்கித் தர வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இது குறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் கேட்டபோது, “கடந்த சில மாதங்களாகவே வனப் பகுதியில் உள்ளவர்கள் வனத்தை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்து, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒகேனக்கல் பகுதியில் மீன் பிடிக்க காவிரி ஆற்றுக்குச் சென்ற மீனவர்கள், அங்கே வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதி யானை வழித்தடம் என்பதால், இவர்களை வெளியே வருமாறு பலமுறை நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அவர்களுக்கு மாற்று இடமாகவும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மக்கள் ஊட்டமலை பகுதியில் இடம் ஒதுக்கினால் மட்டுமே செல்வோம் எனக் கூறி, இங்கிருந்து வெளியே செல்ல மறுத்து வருகின்றனர்.

ஆனால், யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வனப் பகுதிக்குள் குடியிருக்க வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பவானி ஆற்றில் மிதந்த உடல்.. மீட்கச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Last Updated : May 12, 2024, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details