தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொன்னதை செய்த தருமபுரி எம்பி.. தொப்பூர் சாலை விபத்திற்கு வந்தது தீர்வு!

DMK MP SENTHILKUMAR: தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தைத் தடுக்க 6.6 கிலோமீட்டர் மேம்பாலம் பணிகள் இன்று (மார்ச்.11) தொடங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மத்திய அரசுக்குத் தருமபுரி எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 10:49 PM IST

dMK MP SENTHILKUMAR
dMK MP SENTHILKUMAR

சொன்னதை செய்த தருமபுரி எம்பி

தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் மலைப் பாதையில் ஏற்படும் விபத்தைத் தடுக்க 6.6 கி.மீ தூரம் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனத் தருமபுரி எம்.பி செந்தில் குமார் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகக் கோரிக்கை மனு அளித்தும், தொடர்ந்து மத்தியக் கப்பல் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்களைச் சந்தித்தும் வலியுறுத்தி வந்தார்.

இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.905 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்து ஒப்பந்தப் புள்ளி கோரியிருந்தது. ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று(மார்ச்.11) நடைபெற்றது.

இந்த பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் சாலை அமைக்கும் பணியினைத் தொடங்கி வைத்தார். தருமபுரி சுங்கச் சாவடி அருகே எம்பி செந்தில்குமார் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி அன்பைப் பகிர்ந்தார். பின்னர், மேம்பாலச் சாலை அமைக்கப்பட உள்ள பகுதிக்கு நேரடியாகச் சென்று அதிகாரியிடம் ஆய்வு நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிகமாக விபத்து நடக்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் முதல் முறையாக நான்கு வழிச் சாலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருக்கும் பொழுது கடந்த 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சாலை விரிவாக்கத்திற்குப் பிறகும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.

விபத்து நடைபெறும் பகுதிக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்பதன் தொடர் முயற்சியாக மத்திய அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உதவியுடன் காணொலி காட்சிகள் தயார் செய்யப்பட்டு மத்திய அரசு அதிகாரிகளுக்கு விளக்கியதன் காரணமாக நான்கு திட்டங்கள் தயார் செய்யப்பட்டு இறுதியாக மூன்று சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தருமபுரியிலிருந்து சேலம் செல்வதற்குப் புதிதாகப் போடப்படும் சாலை பயன்பாட்டுக்கு வரும். தற்போது, இருக்கும் நான்கு வழிச் சாலை சேலத்திலிருந்து தருமபுரி வருவதற்கும், உயர் மட்டச் சாலை மற்றும் கீழ் மட்டச் சாலைகள் ஆகியவை நாமக்கல்லிலிருந்து சேலம் வழியாகத் தருமபுரி வருவதற்குப் போடக்கூடிய ஆறு வழிச் சாலையில் இணைக்கப்படும்.

விபத்தை ஏற்படுத்தக்கூடிய 800மீ சாலையைத் தவிர்த்து, தற்போது புதியதாகச் சாலை அமைக்கக்கூடிய திட்டத்தை ரூ.775.4 கோடி அளவில் மத்தியக் கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அனுமதி கொடுத்ததால் இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாகப் பணிகள் இன்று (மார்ச்.11) முதல் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரச் சூழ்நிலை உள்ளது. தொப்பூரில் அதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது. மூன்று ஆண்டுகளில் சாலை அமைப்பதில் சில மாறுபாடுகள் இருக்கும் மக்கள் புதிய பயன்பாட்டு வருவதற்குள் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கி செல்ல வேண்டும்.

சாலை அமைக்கப்பட்டால் இந்தியாவிலேயே பாதுகாப்பான சாலை என்ற இலக்கை அடையும். மத்திய அரசுக்கும் பிரதமருக்கும், அமைச்சர் நிதின் கட்கரிக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தருமபுரி மாவட்ட நிர்வாகம் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன், போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்டோருடன் இருந்தனர்.

இதையும் படிங்க:நாடாளுமன்றத் தேர்தல்: தூத்துக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details