தமிழ்நாடு

tamil nadu

திருச்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை வழக்கு.. முக்கிய நபரின் திடுக்கிடும் வாக்குமூலம்! - admk ex councilor son murder case

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 3:54 PM IST

ADMK Ex Counciler Son Murder Case: திருச்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருச்சி
திருச்சி

திருச்சி: திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர், முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ஆவார். இவர்கள் கேபிள் டிவி தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களது மகன் முத்துக்குமார் (32) பிபிஏ படித்து முடித்துவிட்டு பன்றி வளர்ப்புத் தொழிலை கவனித்து வந்துள்ளார். இந்தச் சூழலில், பன்றி வளர்ப்புத் தொழில் தொடர்பாக இவர்களது குடும்பத்திற்கும், கேபிள் சேகரின் அண்ணன் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்பட்டது.

இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேபிள் சேகரை பெரியசாமி மகன் சிலம்பரசன் வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன்பின் இதனால் ஆத்திரம் அடைந்த கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார், சிலம்பரசனை கடந்த 2021ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்ததாக கூறப்பட்டது.

இந்த முன் விரோதம் காரணமாக, தனது அண்ணனை வெட்டி கொலை செய்த முத்துக்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு, நேற்றைய முன்தினம் சிலம்பரசனின் தம்பி லோகநாதன் மற்றும் அவர் கூட்டாளிகள் 5 பேர், திருச்சி அரியமங்கலம் பகுதியில் முத்துக்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் முகம் சிதைந்து முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், லோகநாதன் மற்றும் கூட்டாளிகள் 5 பேர் முத்துக்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது.

பின்னர் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லோகநாதனை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கூட்டாளிகளான அரியமங்கலம் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த குமரேசன் (24), இளஞ்செழியன் (24), தினேஷ் (24), பொன்மலைபட்டியைச் சேர்ந்த தங்கமணி (37) உள்ளிட்ட கூட்டாளிகள் 5 பேரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், மீதமுள்ள 1 நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து முக்கிய நபரான லோகநாதன் போலீசாரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், "எனது தந்தை பெரியசாமி அதிக அளவு பன்றி வளர்த்து, அதன்மூலம் அதிக வருமானம் ஈட்டி வந்தார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தார். அதன் பின்னர், தொழில் முழுவதும் எனது சித்தப்பா கேபிள் சேகர் கைக்குச் சென்றது.

அவர் அந்த வருமானத்தை தனது மனைவி குழந்தைகளுக்குச் செலவழித்து வசதியாக வாழ்ந்து வைத்தார். நான் எனது சகோதரர்கள் தங்கமணி, சிலம்பரசன் ஆகியோர் உள்ளூர் மாநகராட்சிப் பள்ளியில் படித்தோம். ஆனால், சித்தப்பாவின் மகன் மற்றும் மகள்கள் ஊட்டி தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி படித்தனர். இந்த ஏற்றத்தாழ்வு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் எங்கள் அண்ணன் சிலம்பரசன் சொத்தைப் பிரித்து தருமாறு கேட்டார். அதற்கு சித்தப்பா கேபிள் சேகர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அவரைக் கொலை செய்தோம். பின்னர் எனது அண்ணன் சிலம்பரசனை முத்துக்குமார் கொலை செய்தார். இதனால் முத்துக்குமாரைக் கொலை செய்ய திட்டமிட்டு, நேற்று நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து அவரை கொலை செய்தோம்" என கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு லோகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரையும் அரியமங்கலம் போலீசார் கைது செய்து பின்னர், காஜாமலை பகுதியில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தலைமறைவாக இருக்கும் பிரசாந்த்தை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கொளுத்தும் வெயில்.. கோடைகால தீ முதல் கேஸ் சிலிண்டர் வரை.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - Awareness Of Fire Accident

ABOUT THE AUTHOR

...view details