கோயம்புத்தூர்: கேரளாவைச் சேர்ந்த ஜானி தாமஸ் என்பவர், ஜானி சகாரிகா என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்து விநியோகித்து வருகிறார். இவர் பல்வேறு படங்களுக்கு விநியோகஸ்தராகவும், பைனான்சியராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு கத்தாரில் பணிபுரிந்து வந்த கோவை வடவள்ளியைச் சேர்ந்த துவாரக் உதயசங்கர் என்பவருக்கும், ஜானிக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது 5 படங்களை தயாரிக்கப் போவதாகவும், புதிய படங்களில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என துவாரக்கிடம் ஜானி தாமஸ் மற்றும் அவரது மகன் உறுதி அளித்துள்ளனர். இதை அடுத்து, முதல் கட்டமாக 75 லட்சம் ரூபாயை துவாரக் முதலீடு செய்துள்ளார்.
இதை வைத்து ’நான்சென்ஸ்’ என்ற ஒரு திரைப்படத்தை ஜானி தாமஸ் தயாரிக்கத் தொடங்கி, இரண்டாம் கட்டமாக இரண்டு கோடி ரூபாயை துவாரக் ஜானியிடம் வழங்கியுள்ளார். பின்னர், 2018ஆம் ஆண்டு பணத்தை திரும்ப கேட்டபோது, படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ஜானி மற்றும் அவரது மகன் ரான் ஜானி ஆகியோர், சில நாட்கள் கழித்து 50 லட்சம் ரூபாயை மட்டும் லாபம் எனக் கூறி உள்ளனர்.