சென்னை: சென்னையை பொறுத்தவரை மீன் மார்க்கெட் என்றாலே நம் அனைவரின் நினைவில் உடனடியாக வருவது காசிமேடு,
பட்டினப்பாக்கம் மீன் அங்காடி தான். ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு, பட்டினப்பாக்கம் மீன் அங்காடிகளில் இறைச்சி பிரியர்களின் கூட்டம் அலைமோதும்.
பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டை பொறுத்தவரை லூப் சாலையில் இருமுறமும் மீனவர்கள் மீன் கடைகள் அமைத்து மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். காமராஜர் சாலையிலிருந்து சீனிவாசபுரம் பகுதிக்கு செல்பவர்களுக்கும், சீனிவாசபுரம் பகுதியிலிருந்து காமராஜர் சாலையை அடைய நினைப்பவர்களுக்கும் லூப் சாலை மிக முக்கியமான சாலை மற்றும் பரபரப்பான சாலையாக உள்ளது.
பரபரப்பு நிறைந்த லூப் சாலை: மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரும் இந்த லூப் சாலையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் இறைச்சி பிரியர்கள் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடிக்கு படையெடுப்பதாலும், அவர்களின் வாகனங்கள் சாலையிலேயே விட்டுவிடுவதாலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயணம் செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். எனவே, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
நவீன மீன் அங்காடி திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையில் மீனவர்களின் நலன், வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி அமைக்க அரசின் நிர்வாக அனுமதி கோரி விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில், பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நிர்வாக அனுமதியும், உள்கட்டமைப்பு, வசதிகள் நிதியின் கீழ் ரூ.9 கோடியே 97 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.