தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின்பும் அதிமுக போராட்டங்களை சந்தித்து வருகிறது" - நெல்லையில் ஈபிஎஸ் பேச்சு!

எம்.ஜி.ஆர் காலத்திலும் பல போராட்டங்களை அதிமுக சந்தித்தது. ஜெயலலிதா காலத்திலும் பல போராட்டங்களை சந்தித்தது. இப்போதும் அதிமுக போராட்டத்தை சந்தித்து வருகிறது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 11 hours ago

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி :அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அதிமுக சார்பில் கட்சி கொடியேற்றுதல், பொதுக்கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கான பிரம்மாண்ட மேடையும், அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் சாலையில் வடக்கு ரத வீதியில் அமைக்கப்பட்டிருந்தது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேடையில் பேசிய அவர், "கட்சியை உருவாக்கி குறுகிய காலத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அதிமுக தொடங்கிய போது எம்.ஜி.ஆர் சந்தித்த இன்னல்களை விட பலமடங்கு இன்னல்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் சந்தித்தார். அதுமட்டுமின்றி திமுக எந்த காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்ததாக சரித்திரம் கிடையாது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசும்போது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. பல இன்னல்களுக்கு மத்தியில் தான் அதிமுக தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் காலத்திலும் பல போராட்டங்களை அதிமுக சந்தித்தது. ஜெயலலிதா காலத்திலும் பல போராட்டங்களை சந்தித்தது. இப்போதும் அதிமுக போராட்டத்தை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க :திராவிட நாடா, தமிழ்நாடா?.. அன்பில் மகேஷ் விவாதம் செய்ய தயாரா? - சீமான் சவால்!

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வில் திமுக எம்.எல்.ஏக்கள் செய்ததை நாடே பார்த்து கொண்டிருந்தது. அப்போது இருந்த நம்ம சட்டபேரவைத் தலைவரின் கையை பிடித்து இழுத்து திமுகவினர் அதில் போய் அமர்ந்தனர். திமுகவின் குடும்பத்தில் அரசு இப்பொழுது சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாக இருக்கிறது.

சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த வாக்குபதிவில், சில எட்டப்பர்கள் இருந்து திமுகவுக்கு ஆதரவாக அதிமுக எதிராக வாக்களித்தனர். அப்படிபட்ட எட்டப்பர்களுக்கு கட்சியின் உயரிய பதவியை வழங்கினோம். பல லட்சம் பேர் இரவு, பகல் பாராது உழைத்து ஆட்சி அமைத்ததை கலைப்பதற்கு சிலர் துணை போனார்கள். அதிமுக எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது" என பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details