தமிழ்நாடு

tamil nadu

அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது.. தேர்தல் ஆணையம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 4:45 PM IST

AIADMK Inter Party Election: அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததையடுத்து, உட்கட்சி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், “அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை.

கட்சியின் சட்ட விதிகளின்படி அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து, பொதுச் செயலாளர் பதவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது அது போன்று அதிமுகவில் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதிமுக சார்பில், கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளை நியமிக்கவில்லை” என தெரிவித்திருந்தார்.

மேலும், “இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும், அந்தப் புகாருக்கு இதுவரை எந்த விதமான பதிலும் இல்லை. அதிமுக உட்கட்சித் தேர்தலை நடத்தாமல், நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நேரில் ஆஜராகி, உட்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், சர்வாதிகார முறையில் நடைபெற்றது என்பதால், நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டதாகவும், உட்கட்சித் தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது எனவும், சின்னம் தொடர்பான விவகாரத்தில்தான் தலையிட முடியும் என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் பிரதிவாதியாக அதிமுகவை மனுதாரர் சேர்க்கவில்லை என்றும், உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்து பொதுச் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்டு விட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளார். அதனால், மனுதாரர் சிவில் நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்.. 2 மணி வரை பேரவை ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details