தமிழ்நாடு

tamil nadu

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு; நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க எடப்பாடி பழனிசாமி மனு! - Edappadi Palaniswami

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 1:58 PM IST

Edappadi K Palaniswami defamation case: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுதாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, தயாநிதி மாறன் (கோப்புப்படம்)
எடப்பாடி பழனிசாமி, தயாநிதி மாறன் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2004, 2009, 2019 ஆண்டு முதல் மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாகவும், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவை தொலைத் தொடர்புத்துறையில் முன்னோக்கி கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து, ஏப்ரல் 15ஆம் தேதி புரசைவாக்கத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், குடும்ப வளர்ச்சிக்கு பாடுபடும் தயாநிதி மாறனை தோற்கடிக்க வேண்டும். தொகுதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 75 சதவீதத்தை தயாநிதி மாறன் செலவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதி நிதியில் 95 சதவிகித நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. உண்மையை மறைத்து அவதூறான, புறம்பான கருத்துக்களை மக்களிடம் பரப்பி வரும் எடப்பாடி பழனிசாமியின் கருத்து தனது நற்பெயருக்கு அவதூறை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவதூறு சட்டத்தின் கீழ் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:புறப்பட்டாரா ஸ்டாலின்? அமெரிக்காவில் 17 நாட்கள்.. முதல்வர் பயணத்தை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details