சென்னை:அதிமுகவின் 53ஆம் ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “தமிழக வரலாற்றில் ஐந்து முறை ஆட்சி செய்த ஒரே இயக்கம் அதிமுக. ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்திய ஒரே இயக்கம் அதிமுக.
பொய்யான தகவலை திமுக பரப்புகிறது: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. பின்னர் விளக்கிக் கொள்ளப்பட்டாலும், ஒரு நாளில் பெய்த மழைப்பொழிவை சமாளிக்க ஸ்டாலின் அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னையில் மழை நீரே தேங்க வில்லை என பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.
மழைநீர் வடிகால் பணிகள் என்னாச்சு?சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் 99 விழுக்காடு முடிந்து விட்டதாக தமிழக முதலமைச்சரும், துறை சார்ந்த அமைச்சர்களும், மேயரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்துள்ளது மக்கள் மழை நீரில் தத்தளிப்பதை வைத்து அதனை உறுதி செய்ய முடியும்.
இதையும் படிங்க:சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனு.. மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!
திருப்புகழ் கமிட்டி பரிந்துரை:சென்னை மாநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்தது. ஆனால் அதை ஸ்டாலின் அரசு நடைமுறைப்படுத்தியதா என்பது பற்றிய முறையான வெள்ளை அறிக்கை திமுக வெளியிட வேண்டும்.