தமிழ்நாடு

tamil nadu

அதிமுக உறுப்பினர்களை தற்காலிக இடைநீக்கம் செய்ய கோரிய தீர்மானம் நிறைவேற்றம்.. - TN Assembly Session 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 12:43 PM IST

AIADMK Members Suspended in TN Assembly: அதிமுக உறுப்பினர்களை தற்காலிக இடைநீக்கம் செய்ய கோரிய தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு மற்றும் அதிமுக உறுப்பினர்கள்
சபாநாயகர் அப்பாவு மற்றும் அதிமுக உறுப்பினர்கள் (Credits-ETV Bharat Tamil Nadu)

சென்னை: இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து பேச அதிமுகவினர் அனுமதி கோரினர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் அனுமதிக்கப்படும் எனக் கூறிய பிறகும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அப்போது அவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'நாட்டில் நடக்கின்ற ஒரு செயலை சட்டமன்றத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு எனவும் நாங்களும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அப்படிப்பட்ட பிரச்சனைகளை சபையில் இருந்து பேசி இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், சபைக்கு வருவது எதற்காக கருப்பு சட்டை அணிந்தார்களோ, அதற்கான காரணத்தை விளக்கத்தை இங்கு பேசாமல் வெளியே போய் பத்திரிக்கையாளரை சந்தித்து பேசும் செயலை தொடர்ந்து செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

இங்கு கள்ளக்குறிச்சி விவகாரத்தை குறித்து பேச பயந்து கொண்டு தான் உள்ளே வருவது வெளியே போவது என உள்ளார்கள் எனவும் முதலமைச்சர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி இருக்கிறார். அவர்களது குழந்தைகளின் படிப்புக்கு உதவி இருக்கிறார். இதைவிட ஒரு அரசாங்கம் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். ஆனால், அவர்கள் ஆட்சியில் குறை சொல்லுவார்கள் என்று பயந்துதான் முதலமைச்சர் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது என பயந்து தான் உள்ளே வருவது வெளியே போவது என மலிவான விளம்பரத்திற்கு எதிர்க்கட்சிகள் அலைகிறார்கள் எனத் தெரிவித்தார்.

பேரவை அலுவல்களை நடைபெறவிடாமல் இடைமறித்தும், சட்டப்பேரவை விதிகளைத் தொடர்ந்து முறையற்று பயன்படுத்துவதாலும் பேரவைக்குத் தொடர்ந்து குந்தகம் விளைவிக்கின்ற வகையில் செயல்படுவதாலும், சபாநாயகர் தொடர்ந்து எச்சரித்தும் பேரவையின் அலுவலைத் தடுத்துக் கொண்டிருக்கும், கோஷமிட்டிருந்த அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவை விதி 171 உள்விதி இரண்டின் கீழ், அதிமுக உறுப்பினர்களை பேரவை பணிகளில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்' என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,"பேரவை தலைவர் அவர்களே கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் குறிப்பாக, அதிமுக கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்றும் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து தாங்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் பிரச்சனையைப் பற்றி பேரவை பேச வாய்ப்பிருப்பதாக தெரிவித்தும், அதை ஏற்க மனம் இல்லாமல் வெளியில் சென்று பேசுவது என்பது இந்த பேரவை, நம்முடைய மாண்புக்கும் மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல எனத் தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயக கடமை ஆற்றாமல் வீண் விளம்பரத்தை தேடுவதிலே முனைப்பாக உள்ளது எனவும்; ஆனால், இந்த துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். இதுதான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள வேறுபாடு" எனக் கூறினார்.

பின்னர் பேசிய சபாநாயகர், "அதிமுக உறுப்பினர்களை தற்காலிக இடைநீக்கம் செய்ய கோரிய தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை பணிகளில் கலந்து கொள்ளக் கூடாது" எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:"பேருந்தில் இனி விருப்பம் போல் பயணம்" - அமைச்சர் சிவசங்கர் கூறிய அசத்தலான 17 அறிவிப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details