தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்த மதுரை மல்லிகை! - Madurai Jasmine price increased

Madurai Malligai price: மதுரை மாவட்டப் பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு காரணமாக, மல்லி வரத்து குறைந்த நிலையில் அதன் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை
பனிப்பொழிவு காரணமாக குறைந்த மதுரை மல்லிகை வரத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 1:09 PM IST

மதுரை:தற்போது ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு காரணமாக, மதுரை மல்லியின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே உள்ளது, புகழ் பெற்ற மலர் வணிக வளாகம். இங்கு நாள்தோறும் 50 டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, சத்திரப்பட்டி, மேலூர், கெட்டாம்பட்டி, வலையங்குளம், கப்பலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக மதுரை பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

குறிப்பாக, இந்த பகுதிகளில் மதுரை மல்லிகைக்கென நல்ல விலையும், உலகளாவியச் சந்தை வாய்ப்பும் உள்ளது. இந்த மதுரை மல்லியில் நறுமணம் மற்றும் அதன் தரம் காரணமாக, மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு மதுரையிலிருந்து மல்லிகை பூ ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மதுரையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, மதுரை மல்லியின் விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் பூக்களின் வரத்தும் குறைந்து காணப்படும் நிலையில், தொடர்ந்து கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய விலை நிலவரப்படி, மதுரை மல்லிகை ரூ.2,000, பிச்சி ரூ.1,200, முல்லை ரூ.1,200, அரளி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.150, செவ்வந்தி ரூ.150, கனகாம்பரம் ரூ.1,000 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வு குறித்து மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “கடந்த ஆண்டு இதேநேரம் மல்லிகை சீசன் தொடங்கிவிட்டது, ஆனால், இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை. பனிப்பொழிவால் பூக்களின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதே இதற்கு காரணம். இதன் காரணமாக விலையும் அதிகரித்துக் காணப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் ஓட்டை; சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

ABOUT THE AUTHOR

...view details