தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இளநிலை நீட் தேர்வு முறைகேட்டை திசைத் திருப்ப முதுநிலை நீட் தேர்வு ரத்து"- டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்! - PG NEET Exam Cancellation Issue

PG NEET Exam Cancellation Issue: முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்து இளநிலை நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை திசைத் திருப்பப் பார்ப்பதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 6:55 PM IST

டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் செய்தியாளர் சந்திப்பு
டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் பொதுச்செயலாளர் இரவீந்திரநாத்சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நாடு முழுவதும் நடைபெற‌ இருந்த முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை மத்திய அரசு இரவோடு இரவாக ரத்து செய்துள்ளது. இது அதன் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்து இளநிலை நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை திசை திருப்ப பார்க்கின்றனர்.

மேலும், இந்த முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்காக பல ஆண்டுகளாக மாணவர்கள் தங்களை தயார் படுத்தி இருக்கிறார்கள். இதன்மூலம் மத்திய அரசு அதற்கான செலவுகளை ஏற்க வேண்டும். அதேபோன்று நீட் இளங்கலை மருத்துவ‌ தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பதை மத்திய அரசு தற்போது ஏற்க துவங்கியுள்ளது. எனவே மத்திய அரசு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக மொழிவாரி மாநிலங்களை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே தேர்வு என கொண்டு வருகிறார்கள். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களையும் கைப்பற்ற மத்திய அரசு சூழ்ச்சி செய்து இந்த தேர்வை நடத்துகிறது.

மருத்துவ படிப்பிற்கு மாநில அரசே நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கை நடத்த வேண்டும். நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் நிலைப்பாட்டிற்கு என்றும் எங்கள் சங்கம் துணை நிற்கும். தேசிய தேர்வு முகமையினால் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.

நேர்மையான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். தற்பொழுது அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தின் மூலம் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் பயிற்சி மையங்களை ஒருங்கிணைத்து அரசு நடைமுறைப்படுத்தி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் கீழ் வரும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு தான் தேர்வு முறைகளை நிர்ணயித்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மற்றும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்!

ABOUT THE AUTHOR

...view details