தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! - Neet Exam - NEET EXAM

NEET Exam: நீட் தேர்வைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் வரும் ஜூலை 3ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவித்துள்ளார்.

கோப்புப்படம், திமுக  தலைமை அலுவலகம்
கோப்புப்படம், திமுக தலைமை அலுவலகம் (Credits - ETV Bharat Tamil Nadu, DMK X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 4:03 PM IST

Updated : Jun 28, 2024, 4:09 PM IST

சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தேர்வு சமூகநீதிக்கு எதிரான தேர்வு முறை, சமத்துவம் இல்லாத தேர்வு முறை, கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்கக்கூடிய தேர்வு முறை, அவர்களது கல்வி உரிமைக்கு தடை போடும் தேர்வு முறை, அவர்களது மருத்துவ கனவைச் சிதைத்து, நீ டாக்டர் ஆக முடியாது என்றும், உனக்கு தகுதியில்லை என்றும் கூறி, தடுப்புச் சுவர் எழுப்புகிறது.

மேலும், நீட் தேர்வு என்பதே மத்திய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கும் மட்டுமே பயனடையும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறை. ஆள்மாறாட்டம் செய்வது வினாத் தாள்களை திருடுவது, விடைத்தாள்களை மாற்றி வைப்பது, மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் என்று இத்தேர்வே முழுமையான மோசடியாக உள்ளது. இதனை முன்பே அறிந்ததால் தான் திமுக நீட் தேர்வை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது.

நீட் தேர்வு என்பதே சமூகநீதி, சமத்துவம், சமவாய்ப்பு, ஏழை எளிய மாணவர்களுக்கு பாதிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு போன்ற காரணங்களுக்காக தான் ஆரம்ப நாள் முதலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக நீட் தேர்வை எதிர்த்து வருகிறார்.

அந்த வகையில் திமுக மாணவர் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தொடர் போராட்டங்களையும், தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு சிந்தனையுள்ள மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மூலம் பல்வேறு விவாதங்கள், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என அனைத்து அறப்போராட்டங்களையும் மாணவர் அணி முன்னெடுத்து நடத்தி உள்ளது.

அதன்பின் திமுக ஆட்சி அமைந்த உடன், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து, நீட் தேர்வினால் ஏற்படும் தாக்கங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தது திமுக. அந்த குழுவின் பரிந்துரையின்படி, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டடு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு தற்போது வரை காத்திருப்பில் உள்ளது.

பாஜக அரசு நீட் தேர்வினை 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்தது முதல் திமுக கடுமையாக எதிர்த்து வந்தது. தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட அத்தனை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தது.

தற்போது நீட் தேர்வில் உள்ள மோசடிகள் மற்றும் குளறுபடிகளை உணர்ந்த பாஜகவை சேராத அரசியல் கட்சிகள், பிற மாநில அரசுகள், ஏன் ஒட்டுமொத் இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்க தொடங்கி விட்டனர்.

நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது. நீட் தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதை தான் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்டமசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தராத நிலையில் இன்று (ஜூன் 28) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முன்மொழிந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளது.

நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் பாஜக அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் வரும் ஜூலை 3ஆம் தேதியன்று காலை 09.00 மணியளவில் சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நீட் விலக்கு தீர்மானம்; கள்ளக்குறிச்சி விவகாரத்தை மடைமாற்ற திமுக நாடகம் - எடப்பாடி குற்றச்சாட்டு! - EPS on NEET Exemption resolution

Last Updated : Jun 28, 2024, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details