தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 1:21 PM IST

Updated : Feb 8, 2024, 1:30 PM IST

ETV Bharat / state

மத்திய அரசின் வரிப் பகிர்வு; புள்ளி விவரங்களுடன் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எம்பி வில்சன்!

Rajya Sabha Wilson: மத்திய அரசின் வரிப்பகிர்வு கொள்கை மூலம், வரி அதிகம் செலுத்தும் தென் மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு குறைவாகவும், வரி குறைவாகச் செலுத்தும் வட மாநிலங்களுக்கு அதிக வரிப் பகிர்வு அளிக்கப்படுவது குறித்து எம்பி வில்சன் பதிவிட்டுள்ள தகவல்கள் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

DMK MP Wilson released details of union govt tax sharing data to states
எம்பி வில்சன்

சென்னை: பொதுவாக மத்தியில் ஆளும் அரசு தென் மாநிலங்களை புறக்கணிப்பதாகவும், இதனால் வடக்கே வாழ்கிறது தெற்கே தேய்கிறது என தமிழகத்தில் ஆட்சி செய்த அரசியல்வாதிகள் தெரிவித்து உள்ளனர். சமீபகாலமாக, இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்க துவங்கி உள்ளது. அதிக வரி செலுத்தும் மாநிலங்களான தென் மாநிலங்களுக்கு, வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மத்திய அரசு குறைந்த அளவே வரிப் பகிர்வு அளிப்பதாக எழும் குற்றச்சாட்டே இந்த விவகாரத்திற்கு முக்கிய காரணம்.

இந்நிலையில், இந்த விவகாரம் பூதாகரமானதற்கு காரணமாக, தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்காததுதான் என கூறப்படுகிறது. தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு சென்னை, வட மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கக் கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசின் குழுவினரும் வெள்ள பாதிப்புகளை நேரில் வந்து ஆய்வு செய்திருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 2ஆம் தேதி பேசிய ஸ்ரீபெரும்புதூர் எம்பியும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, “வெள்ள நிவாரண பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு சார்பில் 37 ஆயிரம் கோடி கேட்டு ஒரு பைசா கூட வழங்கவில்லை. மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது” எனப் பேசினார். மேலும், நிவாரணம் வழங்காத மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 8ஆம் தேதி எம்பிக்கள் கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

முன்னதாக, வெள்ள நிவாரணத்திற்காக கோரிய தொகை வழங்காததால், அதிக ஜிஎஸ்டி வரி செலுத்தும் மாநிலமாக இருந்தும், தங்களுக்கு நிவாரணத் தொகையை வழங்காமல் இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் தங்கள் கண்டணங்களைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோல், 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கர்நாடக மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தது. மேலும், வரிப் பகிர்வில் இதே நிலை நீடித்தால், தென் மாநிலங்களுக்கு தனி நாடு கேட்கும் நிலை ஏற்படும் என காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் பகிரங்கமாகத் தெரிவித்தார். இந்நிலையில், முறையான வரிப் பங்கீடு செய்யாததாக மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லியில் கர்நாடக காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கேரளாவின் கடன் வாங்கும் வரம்பு, வருவாய் பற்றாக்குறை மானியத்தைக் குறைத்ததற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தரில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக இன்று (பிப்.8) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் நிதி பகிர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநில அரசுகள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு மாநிலங்கள் அளிக்கும் ஜிஎஸ்டி வரி மற்றும் அதில் இருந்து மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் வரிப் பகிர்வு குறித்து புள்ளி விவரங்களுடன் திமுக மாநிலங்களவை எம்பி வில்சன், அவரது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரியில், மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள், ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் பங்களித்த மொத்த வரி ரூ.22 லட்சத்து 26 ஆயிரத்து 983.39 கோடி.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தால் பங்களிக்கப்பட்ட தொகை ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 817.60 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் மொத்தம் ரூ.6 லட்சத்து 42 ஆயிரத்து 295.05 கோடி. உத்தரப் பிரதேசத்திற்கு விடுவிக்கப்பட்ட தொகை - ரூ.6 லட்சத்து 91 ஆயிரத்து 375.12 கோடி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பெறப்பட்ட வரி விவரம் குறித்தும், வரி ஒதுக்கீடு குறித்தும் நாடாளுமன்றத்தில் எம்பி வில்சன் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒவ்வொரு மாநிலமும் செலுத்திய ஒரு ரூபாய் அடிப்படையில், மத்திய அரசு திருப்பி அளித்த தொகை குறித்த விவரங்களை பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு - 26 பைசா, கர்நாடகா - 16 பைசா, தெலங்கானா - 40 பைசா, கேரளா - 62 பைசா, மத்தியப் பிரதேசம் - 1 ரூபாய் 70 பைசா, உத்தரப் பிரதேசம் - 2 ரூபாய் 2 பைசா, ராஜஸ்தான் - 1 ரூபாய் 14 பைசா” திரும்ப கிடைப்பதாக பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் வரிப் பகிர்வு குறித்த இந்த தகவல் தற்போது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் திமுக எம்பிக்கள் கறுப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்; பினராயி விஜயன் தலைமையிலும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்!

Last Updated : Feb 8, 2024, 1:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details