தமிழ்நாடு

tamil nadu

கரைபுரண்டு ஓடியும் துலாக்கட்டம் வராத காவிரி.. செயற்கை ஷவரில் ஆடிப்பெருக்கு கொண்டாடிய பக்தர்கள்! - aadi perukku festival

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 6:28 PM IST

Aadi Perukku festival: மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
ஆடிப்பெருக்கு விழா (Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை:இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறையின் நகரப் பகுதியில் அமைந்துள்ள காவிரி துலாக்கட்டம் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புனித இடமாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் பக்தர்கள் தன் பாவச் சுமைகளை போக்குவதற்காக நீராடுவது வழக்கம்.

ஆடிப்பெருக்கு விழா கொண்டாடிய பக்தர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால் இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் இங்கு வந்து ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி சிவபெருமானை வணங்கி பக்தர்களினால் உண்டான தங்களது பாவச்சுமையை போக்கிக் கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி புனித நீராடிச் செல்வர்.

ஆனால், மேட்டூரில் திறக்கப்பட்ட உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலில் கலந்து வரும் நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் வறண்டு கிடக்கிறது. இந்நிலையில், ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் மூலம் புஷ்கர தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு, பக்தர்கள் புனித நீராடும் வகையில் பிரத்யேகமாக குழாய் மூலம் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குறைந்த அளவே கூட்டம் காணப்பட்டது.

ஆடிப்பெருக்கினை முன்னிட்டு பக்தர்கள் காவிரி அன்னையை கன்னிப் பெண்ணாக நினைத்து செயற்கை முறையில் அமைத்துள்ள பிரத்யேக ஷவரில் புனித நீராடி காமாட்சி விளக்கில் தீபமேற்றி, தலைவாழை இலை வைத்து காப்பரிசி, கண்ணாடி வளையல், தாலிக்கயிறு, மாவிளக்கு, மஞ்சள் குங்குமம், கருகமணி, பேரிக்காய், விளாங்காய் உள்ளிட்ட பழங்கள் வைத்து தீபமிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.

பின்னர், மஞ்சள் நூலினை ஒருவருக்கு ஒருவர் கைகள் மற்றும் கழுத்தில் பெண்கள் கட்டிக் கொண்டு காவிரித்தாயை வழிபட்டனர். மேலும், புதுமண தம்பதியர் தாலி பிரித்து கட்டிக் கொள்ளும் பாரம்பரியமான சடங்கு காவிரி ஆற்றின் கரையில் நடைபெற்றது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்ட எல்லைப் பகுதிக்கே தண்ணீர் வந்தடையாததால் ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆடி அமாவாசை; களைகட்டும் காரையாறு சொரிமுத்து அய்யனால் கோயில்!

ABOUT THE AUTHOR

...view details