தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டிற்கான தனிக் கல்விக்கொள்கை அறிக்கை; முதலமைச்சரிடம் நாளை சமர்ப்பிப்பு! - TN NEW EDUCATION POLICY

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 7:16 PM IST

TN EDUCATION POLICY: தமிழ்நாட்டிற்கான தனி கல்விக்கொள்கை தயாரித்த குழுவின் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் நாளை வழங்குகிறார்.

CM MK STALIN, JUDGE MURUGESAN
CM MK STALIN and JUDGE MURUGESAN (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:மத்திய பாஜக அரசு, கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. அதனை இந்தியா முழுவதும் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக்கொள்கை வரைவு வெளியிட்டபோதே, எதிர்கட்சியாக இருந்த திமுக கடுமையாக எதிர்த்தது. மேலும், தேசியக் கல்விக்கொள்கை குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறது எனக் கூறி வந்தது.

மேலும், இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் தமிழ்நாட்டிற்கு எதிர்ப்பாக இருப்பதால், அதனை ஏற்க முடியாது எனவும், தமிழ்நாட்டிற்கு என்று பிரத்யேகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதன்படி, 2022 ஜூன் 1ஆம் தேதி அமைக்கப்பட்ட முருகேசன் தலைமையிலான இந்தக் குழுவில் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் இடம்பெற்று இருந்தனர். பொதுமக்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரிடம் இருந்தும், கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்று, முருகேசன் தலைமையிலான குழு அறிக்கையை உருவாக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டது.

ஓராண்டுக்குள் பணி முடியாத நிலையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு, அதன் பிறகு 2023 ஆண்டு செப்டம்பரில் அறிக்கை இறுதி செய்யப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால் குழுவின் அறிக்கையை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் அறிக்கை தயாரிப்பு குழுவில் இருந்ததால், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறையின் அதிகாரிகள் அதில் உள்ள அம்சங்களையும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கான தனிக் கல்விக் கொள்கை குறித்து அறிக்கையை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் வழங்க உள்ளனர். இந்த அறிக்கை 650 பக்கங்கள் கொண்டாதாக இருக்கும். அதன் பின்னர், வரைவு அறிக்கை மீது அரசு கருத்துக் கேட்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாஞ்சோலை விவகாரம்; விருப்பமில்லாமல் விஆர்எஸ்-ல் கையெழுத்து போட்டோம்.. தொழிலாளர்கள் வேதனை! - Manjolai estate workers

ABOUT THE AUTHOR

...view details