நீலகிரி: குன்னூர் ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்த குன்னூர் மலை ரயில் நிலையம் கடந்த 1908ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலை ரயில் பயணத்தின் போது இயற்கை அருவிகள், குகைகள், வளைந்து நெளிந்து செல்லும் ரயில் பாதை இயற்கை காட்சிகள், போன்றவற்றை ரசித்துச் செல்ல முடிகிறது.
இந்தப் பயணத்திற்காகவே அதிக வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நுழைவு வாயிலாக உள்ள இந்த ரயில் நிலையத்தை பழமை மாறாமல் பராமரித்து வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்கின்றனர்.
இதில் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் நீலகிரி மாவட்ட நுழைவாயிலாக உள்ள குன்னூர் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ரயில்வே நிர்வாகம் சார்பாக ரூ.15 கோடி செலவில் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது.