சென்னை:சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்கள் மீது மது வாசனை இருந்தால், அதன் அளவுகளை அறிக்கைகளில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ரமேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளார். இந்நிலையில், அவர் இழப்பீடு கோரி பெரம்பலூர் விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மருத்துவ அறிக்கையை மேற்கோள்காட்டி, ரமேஷ் மீது மது வாசனை வீசியதாலும், பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றாததாலும், விபத்துக்கு அவரும் காரணம் எனக் கூறி, 50 சதவீத இழப்பீடாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 952 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று (ஏப்.17) விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மது வாசனை வீசியதாக கூறிய போதிலும், அதன் அளவைக் குறிப்பிடவில்லை. மாநிலத்தில் உள்ள சாலைகளில் பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற முடியாது எனக் கூறி, ரமேஷுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை 3 லட்சத்து 53 ஆயிரத்து 904 ரூபாயாக அதிகரித்து வழங்க உத்தரவிட்டார்.