தமிழ்நாடு

tamil nadu

அண்ணாமலை Vs செல்வப்பெருந்தகை.. மாறிமாறி போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்! - Protest against Annamalai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 10:08 PM IST

Protest against annamalai: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அண்ணாமலை கூறிய கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று விமர்சித்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று (புதன்கிழமை) அண்ணாமலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், சென்னை காரம்பாக்கத்தில் தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாநிலச் செயலாளர் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்று அண்ணாமலையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர், அண்ணாமலையின் உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கர், "இந்தப் போராட்டம் அண்ணாமலை மன்னிப்பு கேட்கும் வரை தொடரும். அவர் எங்கள் தலைவரை மட்டும் பேசவில்லை. முதலமைச்சர் உட்பட அனைவரைப் பற்றியும் அவதூறாக பேசுகிறார். பெரிய சர்வாதிகாரி போல நடந்துகொள்கிறார். அவரை தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து கர்நாடகாவுக்கு விரட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.

தேனியில் போராட்டம்:தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நகரின் முக்கிய பகுதியில் கூடி அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனிடையே, உருவ பொம்மையை எரிப்பதை தடுக்கும் விதமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஆட்டோவில் மறைத்து வைத்துக் கொண்டு வந்த அண்ணாமலையின் உருவ பொம்மை, அதேபோல் உணவகம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த உருவ பொம்மை ஆகியவற்றைக் கைப்பற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றி எரிப்பதை தடுத்தி நிறுத்தினர்.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்து கீழே போட்டு செருப்பால் அடிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்ததால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நெல்லை இரு தரப்பு உருவ பொம்மை எரிப்பு:அதேபோல், நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு அக்கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும், அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்து, கிழித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவபொம்மையை கைப்பற்றி தீயை அணைத்தனர்.

இதனிடையே, நெல்லை பாஜக அலுவலகம் முன்பாக கூடிய அக்கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் செல்வப்பெருந்தகையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவரது புகைப்படத்தை கிழித்தும், செருப்பால் அடித்தும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் திடீரென செல்வப்பெருந்தகையின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்ததால் பரபரப்பு நிலவியது. பின்னர், அவர்களிடமிருந்து உருவ பொம்மையைக் கைப்பற்றிய போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதையும் படிங்க:பாஜகவில் 124 ரவுடிகளா? போட்டா போட்டியாக பட்டியல் வெளியிடும் செல்வப்பெருந்தகை - அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details