கோயம்புத்தூர்:'ரத்தன் டாடா எங்களை அவரது குடும்பத்தில் ஒருவராக நடத்தினார் எனவும் அவரது குணத்தையும், எளிமையையும் கண்டு வியந்தேன்' என மறைந்த ரத்தன் டாடாவுக்கு சிகிச்சை அளித்த நாட்களின் நினைவுகளை அசை போடுகிறார் கோவை வைத்தியர் இலக்குமணன். கோவை மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனியில் போகர் வலி நீக்கு நிலையம் என்ற பெயரில் மூன்று தலை முறைகளாக வலி நீக்கு வைத்திய சாலை நடத்தி வருபவர் இலக்குமணன்.
இவர் இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்ந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவிற்கு மூட்டு மற்றும் முதுகு வலிக்கு சிகிச்சை அளித்ததாக கூறியுள்ளார். ரத்தன் டாடா புதன்கிழமை இரவு மறைந்த நிலையில், அவரின் எளிமையான குணங்களை குறிப்பிட்டு பலர் சமூக வலைதளத்தில் எழுதி வருகின்றனர்.
செல்போனில் அழைப்பு:அதன்படி ரத்தன் டாடாவிற்கு சிகிச்சை அளித்தது குறித்தும் அவரின் எளிமையான குணம் குறித்து வைத்தியர் இலக்குமணன் ஈடிவி பாரத் ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார். "கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா குழும இயக்குநர்களில் ஒருவரும் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவரும் கேரள மாநிலம், தலச்சேரியை பூர்விகமாகக்கொண்ட கிருஷ்ணகுமார் திடீரென ஒருநாள் என்னைத் தொடர்பு கொண்டார்.
முதுகு வலி, மற்றும் முழங்கால் வலியால் அவதிப்படும் ரத்தன் டாடாவுக்கு வர்ம சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று எனது மனைவி மனோன்மணியுடன் ரத்தன் டாடா இல்லத்திற்கு சென்றோம்" என பழைய நினைவுகளை கூறினார் வைத்தியர் இலக்குமணன்.
ரத்தன் டாடாவிற்கு மூலிகை எண்ணெய்:அதனை தொடர்ந்து ரத்தன் டாடாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து பகிர்ந்தவர், "2019 அக்டோபர் 30ம் தேதியில் இருந்து 4 நாள்கள் அங்கேயே தங்கியிருந்து அவரது முதுகு வலி பிரச்னைக்கு வர்ம சிகிச்சை அளித்தோம். அதில் அவரது பிரச்சனை பெருமளவு குறைந்தது. பின்னர், எங்களின் பிரத்யேக மூலிகை எண்ணெயையும் வழங்கிவிட்டு வந்தோம்.
அதன் பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக எங்களை வரவழைத்தார். அப்போது 3 நாட்கள் தங்கி மீண்டும் சிகிச்சை அளித்தோம். சிகிச்சைக்கு முன்பு குனிந்தபடியே நடமாடி வந்த அவர், எங்களது சிகிச்சைக்குப் பிறகு முதுகை நிமிர்த்தி நடந்தார். வலியால் அவதிப்பட்ட அவர் அதில் இருந்து மீண்டார். அது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது" என்றார்.