தமிழ்நாடு

tamil nadu

“உங்க பொன்னு தற்கொலை செஞ்சுகிட்டா..” பதறிய பெற்றோர்.. தலைமறைவான கணவர்.. தருமபுரியில் பரபரப்பு! - Woman Mysterious Death In Eriyur

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், அந்தப் பெண்னின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக பெண் வீட்டார் புகார் அளித்ததால், இரு வீட்டாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

உயிரிழந்த பிரியா மற்றும் இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காட்சி
உயிரிழந்த பிரியா மற்றும் இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சுஞ்சல்நத்தம் ஊராட்சி, எம்.தண்டா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் பெங்களூரில் சிப்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசனுக்கும், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் மற்றும் மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில், வெங்கடேசன் அடிக்கடி மது போதையில் பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் சமீபத்தில் பிரியா ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, ஏரியூர் காவல் ஆய்வாளர் விசாரணை செய்து சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழலில், நேற்று (செப்.21) மீண்டும் மது போதையில் தனது வீட்டிற்கு வந்த வெங்கடேசன், பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரியாவின் கையை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாது, பாலக்கோட்டில் உள்ள பிரியாவின் பெற்றோருக்கு "உங்களது மகள் தற்கொலை செய்து கொண்டாள்" என்று தகவல் கூறியதாகவும், இதனை அடுத்து பிரியாவின் உறவினர்கள் வருவதற்குள் அடக்கம் செய்வதற்காக வெங்கடேசன் ஏற்பாடு செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மன அழுத்தம் காரணமாக சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை

இதனை அறிந்து விரைந்து வந்த பிரியாவின் உறவினர்கள், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி காவல் துறையினரிடம் புகார் அளித்ததன் பேரில், பிரியாவின் உடலை பென்னாகரம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தகவலறிந்து தலைமை மருத்துவமனைக்கு வந்த தருமபுரி ஆர்டிஓ தென்னரசு விசாரணை செய்துச் சென்ற நிலையில், வெங்கடேசனை உடனே கைது செய்ய வேண்டும் என்று பிரியாவின் உறவினர்கள் காவல் துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், வெங்கடேசன் உறவினருக்கும், பிரியா உறவினர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வெங்கடேசன் மற்றும் அவரது பெற்றோர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details