மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியது. சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட கூறைநாடு, செம்மங்குளம் பகுதியில் வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இணைந்து சிறுத்தையைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிறுத்தை ஆரோக்கியநாதபுரம், தூக்கணாங்குளம் பகுதியில் உள்ள கருவேலங்காடு பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மீது உறங்கிய நபர் ஒருவர் சிறுத்தை நடந்து சென்றதைப் பார்த்ததாகக் கூறி உள்ளார். அதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டனர்.
மேலும், சிறுத்தையைப் பிடிப்பதற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 16 தானியங்கி கேமராக்கள், மதுரையிலிருந்து 3 ராட்சச கூண்டுகள், வலைகள் மற்றும் வனத்துறையினருக்குப் பாதுகாப்பு உடைகள், உபகரணங்களும் வரவழைக்கப்பட்டது. மேலும், காட்டுப்பகுதியில் வலைகள் கட்டி மூன்று ராட்சச கூண்டுகளும் வைக்கப்பட்டன. கருவேலங்காட்டில் பொருத்தப்பட்ட தானியங்கி கேமரா மற்றும் கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை.
இந்நிலையில் 3 ஆம் நாளான நேற்று(ஏப்.5) சித்தர் காடு பகுதியில் ஆடு ஒன்றைச் சிறுத்தை கடித்துக் குதறிய நிலையில் ஆடு இறந்து கிடந்தது. ஆடு கொல்லப்பட்டிருந்த தன்மையை ஆராய்ந்த வனத்துறையினர் ஆட்டை சிறுத்தைக் கொன்று இருக்க 70 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், கால்தடங்கள் இல்லாததால் உறுதியாகச் சொல்லமுடியாது என்றும், பிரேதப் பரிசோதனை அடிப்படையில், உண்மையான தகவல் தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ஆரோக்கியநாதபுரம், கருவேலங்காடு பகுதியில் நேற்றிரவு 3 கூண்டுகளில் ஆடுகள் மற்றும் இறைச்சியை வைத்து சிறுத்தை அகப்படுமா என்று வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க முயற்சி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.