தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகின் 2வது நீளமான மெரினா கடற்கரை பெறப்போகும் நீலக்கொடி சான்றிதழ்! அப்படியென்றால் என்ன?

உலகத்தின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெருமையை உடைய மெரினா கடற்கரைக்கு மற்றொரு கூடுதல் அங்கீகாரமாக நீலக்கொடி (Blue flag) சான்றிதழ் கிடைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை மற்றும் நீலக்கொடி சான்றிதழ்
மெரினா கடற்கரை மற்றும் நீலக்கொடி சான்றிதழ் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை: மிக நீளமான கடற்கரையில் உலகின் இரண்டாவது இடமும், இந்தியாவின் முதலிடமும் பிடித்திருப்பது சென்னை மெரினா கடற்கரை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மெரினா கடற்கரைக்கு கூடுதல் அங்கீகாரமாக நீலக்கொடி (Blue flag) சான்றிதழ் கிடைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக உலகத்தரம் வாய்ந்த வசதிகளை சென்னை மெரினா கடற்கரையில் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், நீலக்கொடி சான்றிதழ் என்றால் என்ன? யார் அந்த சான்றிதழ்களை வழங்குவார்கள்? ஏன் சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் கொடுக்கப்படுகிறது? அதனால் என்ன பயன்? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

நீலக்கொடி சான்றிதழ்: சுற்றுச்சூழல் மேலாண்மை, சுத்தமான மணல், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள், குளிக்க தகுந்த சுகாதாரமான நீர், பாதுகாப்பு உள்ளிட்ட 33 அம்சங்களை மையமாக வைத்து நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் பெறப்பட்டிருக்கும் கடற்கரை பாதுகாப்பான சுகாதாரமான கடற்கரை என்ற அர்த்தத்தை கொண்டிருப்பதாகவும் இருக்க வேண்டும்.

நீலக்கொடி அந்தஸ்து:சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் அழகிய கடற்கரையாக இருக்கும் கடற்கரையை ஆய்வு செய்து டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த நீலக்கொடி அந்தஸ்து பெறும் கடற்கரைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் பெரும்பான்மையான நாடுகள் நீலக்கொடி சான்றிதழை பெற முயற்சி செய்து வருகின்றனர்.

இந்தியாவில் நீலக்கொடி: உலகளவில் இதுவரை 4154 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளது. இந்தியாவில் இது முதன்முறை அல்ல, சென்னை மெரினா கடற்கரையை தவிர்த்து இதற்கு முன் ஒடிசாவில் உள்ள கோல்டன் கடற்கரை, குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர் கடற்கரை, கேரளாவில் உள்ள கப்பாட் கடற்கரை, டையுவில் உள்ள கோக்லா கடற்கரை, அந்தமானில் உள்ள ராதா நகர் கடற்கரை, கர்நாடகாவில் உள்ள காசர் கோடு, படுபித்ரி கடற்கரை, ஆந்திராவில் உள்ள ருசி கொண்டா கடற்கரை, தமிழ்நாட்டில் உள்ள கோவளம் கடற்கரை, புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரை ஆகிய 10 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:வன நிலங்களை அளவிட இனி ஜிபிஎஸ் கருவி.. நெல்லையில் நடந்த டிஜிட்டல் பயிற்சி!

நீலக்கொடி பட்டியலில் இடம்பெற தயாராகும் மெரினா: நீலக்கொடி சான்றிழதயை பெற நடைபெறும் கட்டமைப்பு பணிகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் 5.62 கோடி ரூபாய்க்கு டெண்டரும் கோரப்பட்டிருக்கிறது. டெண்டர் நவம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது. டெண்டரில் தேர்வாகும் நிறுவனம் நவம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு கட்டமைப்பு பணிகளை தொடங்கி விரைவில் முடித்து நீலக்கொடி சான்றிதழை பெறும் முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த வசதிகள்:நீலக்கொடி சான்றிதழ் பெற சென்னை மெரினா கடற்கரையில் எல்இடி விளக்குகள், சோலார் பவர் பிளான்ட், சிசிடிவி கேமராக்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனி தனியே கழிவறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள், நடைபாதை, மிதிவண்டி வழித்தடங்கள், விளையாட்டுப் பகுதிகள், படகு துறை, கண்காணிப்பு கோபுரம் இவற்றுடன் பாரம்பரிய தாவரங்கள் வகைகள் இருக்கக்கூடிய ஆய்வு கூடம் உள்ளிட்ட கட்டமைப்புகள் செயல்படுத்தப்பட உள்ளனர். மேலும், ரூ.1,275 கோடியில் தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடன் உதவி மூலம் கடலோர மேம்பட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே மாதத்தில் முடிவடையும் கட்டமைப்பு பணி: மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் பேசுகையில், "சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழை பெறுவதற்காகவும், கட்டமைப்பு பணிகளை துவங்குவதற்காகவும் சென்னை மாநகராட்சி டெண்டர் விடப்பட்டுள்ளது.

டெண்டர் பெறும் நிறுவனம் ஒரு மாதத்திற்குள் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான கட்டமைப்பு பணிகளை முடித்துக் கொடுக்க உள்ளனர். அதன் பின்னர், விண்ணப்பம் செய்து டென்மார் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை குழுவினர் சென்னை மெரினா கடற்கரை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி அந்தஸ்து வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று மகேஷ் குமார் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details