தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

24 மணி நேரத்திற்குப் பிறகு கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ்.. இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை ஏர்போர்ட்! - Microsoft Windows Vulnerability - MICROSOFT WINDOWS VULNERABILITY

Microsoft Glitch Issue: சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரத்திற்குப் பிறகு இணையதள சேவைகள் சீரடைந்ததையடுத்து, பயணிகளுக்கு மேனுவல் போர்டிங் பாஸ் கொடுப்பது நிறுத்தப்பட்டு மீண்டும் கம்ப்யூட்டர் மூலமாக போர்டிங் பாஸ் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலைய கோப்புப்படம்
சென்னை சர்வதேச விமான நிலைய கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 2:54 PM IST

சென்னை: மைக்ரோசாப்ட் 'விண்டோஸ்' மென்பொருள் செயலிழப்பு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டு, நேற்று (ஜூலை 19) பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாது, ஏராளமான விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகி பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தில் அவதிக்குள்ளாகினர்.

இத்தகைய சூழலில், சென்னை விமான நிலைய பொறியாளர்கள் மற்றும் இணையதள தொழில்நுட்ப வல்லுநர்கள் இரவு பகலாக பணியாற்றி ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு, இன்று (ஜூலை 20) காலை 11 மணியில் இருந்து சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை சீரடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரமாக பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் மேனுவல் முறையில் கைகளால் எழுதிக் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் கம்ப்யூட்டர்கள் மூலமாக பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் இணையதள சேவை தொடங்கியுள்ளதால், விமான நிலைய அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். அதோடு பயணிகளும் கம்ப்யூட்டர் முறையில் உடனடியாக போர்டிங் பாஸ்கள் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், வழக்கமான விமான சேவைகள் இன்று (ஜூலை 20) மாலையில் இருந்துதான் முழுமையாக சீரடையும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இனிமேல் புதிதாக எந்த விமானங்களும் ரத்து ஆகாது, அதேபோல் எதிர் முனையில் வரும் விமானங்கள் தாமதமாக வருவதால் மட்டுமே இங்கிருந்து புறப்படும் விமானங்களும் சிறிது தாமதமாக புறப்பட்டுச் செல்லும். அவைகளும் கூட இன்று மாலைக்கு மேல் சகஜ நிலைக்கு திரும்பிவிடும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:தூத்துக்குடி: மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவு.. 29 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details