சென்னை :தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி சென்னையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 48-வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "48 வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 27ம் தேதி மாலை 4.30 மணி அளவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்க உள்ளனர்.
புத்தகக் கண்காட்சியின் துவக்க நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார். விடுமுறை நாட்களில், புத்தகக்கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
புத்தகக் கண்காட்சி டிசம்பர் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12 வரை 17 நாட்கள் நடைபெறுகிறது. மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10 சதவீதம் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும்.
பபாசியில் உறுப்பினர் அல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது. தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றனர். இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது.
உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான PENGUIN RANDOM HOUSE INDIA AMERICAN CONSULATE, BRITISH COUNCIL, HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON & SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது.