தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுக்குழு நடத்த அனுமதி மறுப்பு; பாரதியார் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்! - BU non teaching staff protest

BU non-teaching staff protest: அவசர பொதுக்குழு கூட்டத்தை நடத்தக் கூடாது என பொறுப்பு பதிவாளர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால், பாரதியார் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தினர் பதிவாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 10:14 PM IST

பாரதியார் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
பாரதியார் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: மருதமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அக்கூட்டத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு மற்றும் பொறுப்பு பதிவாளர் ஆகியோர் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக, ஆயிரக்கணக்கான கோப்புகள் எந்த நடவடிக்கையுமின்றி தேங்கி இருப்பதனால், பல்கலைக்கழக நிர்வாகம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனால் பல்கலைக்கழகம் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அலுவலர் சங்கம் கூறியுள்ளது.

தீர்மானங்கள்:மேலும், இக்கூட்டத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர், தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிற 15ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை சங்கங்களை அழைக்கப்படும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக தந்தை பெரியார் கூட்டரங்கில் நடைபெற இருந்த அவசர பொதுக்குழு கூட்டத்தை நடத்தக்கூடாது என பொறுப்பு பதிவாளர் அனுமதி மறுத்துள்ளார். கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில், பாரதியார் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து பாரதியார் பல்கலைக்கழக அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ் கூறியதாவது, “பதிவாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்டதால் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பதிவாளர் உரிய பதிலளிக்காத நிலையில் தற்போது கலைந்து செல்கிறோம். திங்கட்கிழமை காலையில் பொதுக்குழு நடத்த அனுமதி கோரி போராட்டம் தொடரும் ” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய ஜானகி போல் செய்ய வேண்டும்: கோவையில் ஈபிஎஸ் கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details