தமிழ்நாடு

tamil nadu

கழுகுகளின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்துள்ளது.. எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! - high court on eagles death case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 10:54 PM IST

TOXIC MEDICINE CAUSE EAGLE DEATH CASE: கழுகுகள் உயிரைக் குடிக்கும் மருந்துகளை ஒரு முறைக்கு மேல் கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கழுகு, சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
கழுகு, சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (CREDITS-ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழகத்தில் கழுகுகள் அதிகமாக உள்ள மாவட்டம் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு. இந்த மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் NIMUSLIDE, FLUNIXIN மற்றும் CARPROFEN ஆகிய மருந்துகளை அளிக்கின்றனர். ”இவ்வாறான மருந்துகள் செலுத்தப்பட்ட விலங்குகள் நோய் குணமாகாமல் இறக்கும் நிலையில், அவற்றின் உடல் குப்பையில் எறியப்படும் போது அதை மாமிசத்திற்காக கழுகுகள் உண்ணுகின்றன.

அவ்வாறு மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகளை உண்டதால் அதிகளவிலான கழுகுகள் உயிரிழந்துள்ளது. எனவே, கழுகுகள் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் அந்த மூன்று மருந்தையும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோக் கூடாது” என்னும் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், வன விலங்குகள் ஆர்வலருமான சூர்யகுமார் மனுவாக தாக்கல் செய்திருந்தார்.

மேலும், அந்த மனுவில் 1980ம் ஆண்டில் இந்தியாவில் 4 கோடி கழுகுகள் இருந்த நிலையில், தற்போது 19,000 கழுகுகள் மட்டுமே இருப்பதாகவும், இயற்கையின் சுகாதாரப் பணியாளர்களான கழுகுகளை பாதுகாக்க, நான்கு மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிடிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் முன்னிலையில் இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. அப்போது கழுகுகளை பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதன் காரணமாக கழுகுகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார்.

மேலும், அவர் இந்த மருந்துகளை ஒருமுறை மட்டுமே, அதுவும் 30 மில்லி பயன்படுத்துவற்காகதான் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், தொடர்ச்சியாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பறவைகளை பாதுகாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர் எட்வின் பிரபாகரிடம் அவர் கூறிய வாதத்தின் தரவுகளை விரிவாக எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்

இதையும் படிங்க:உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகாதேவன்

ABOUT THE AUTHOR

...view details