தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 9:45 PM IST

ETV Bharat / state

திருமாவளவனை விமர்சித்துப் பேசியதால், பாஜக பெண் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக பொருளாளர் வாக்குவாதம்! - Lok sabha election 2024

Argument between BJP candidate and VCK executive: அரியலூரில் திருமாவளவனை விமர்சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருக்கும், அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரியலூர் ஒன்றிய பொருளாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

விசிக பொருளாளர் வாக்குவாதம்
திருமாவளவனை விமரிசித்து பேசியதால், பாஜக பெண் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு

திருமாவளவனை விமரிசித்து பேசியதால், பாஜக பெண் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு

அரியலூர்:இந்த சமுதாயம் அராஜகம் செய்யும் சமுதாயம் என்று தான் வெளியில் காட்டுகின்றனர், இதனால் தான் மற்ற சமுதாயத்தினர் நம்மை மதிப்பதில்லை என இன்று (ஏப்.10) அரியலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி பேசியுள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, இன்று அரியலூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்துப் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன், தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, எனவே எனக்கு வாக்களியுங்கள் எனக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி அரியலூர் ஒன்றிய பொருளாளர் பூமிநாதன், பிரச்சார வாகனத்திற்கு முன்பு வந்து, பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை பார்த்து, பேசாதே வாயை மூடு, எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் பூமிநாதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதேசமயம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, தனது பிரச்சாரத்தை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிவந்தார்.

அவர் பேசுகையில், “நீங்கள் அராஜகம் செய்யக்கூடாது, இந்த சமுதாயம் அராஜகம் செய்யும் சமுதாயம் என்று தான் வெளியில் காட்டுகின்றனர். இதனால் தான் மற்ற சமுதாயத்தினர் நம்மை மதிப்பதில்லை. நான் ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண், உங்களிடம் நான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

இந்த சமுதாயத்தில் ஒரு தொழிலதிபர் உள்ளாரா?, இத்தனை ஆண்டுக்காலம் கையை கட்டிதான் நிற்கிறோம், திமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு செல்லாத வாக்கு, அது மழை நீர் வீணாகக் கடலில் கலப்பது போன்றது.

எனக்கு வாக்களித்தால், மோடி அய்யாவிடம் சொல்லி ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பெண்கள் முன்னேற வழி செய்வேன், 10 லட்சம் இருந்து 50 லட்சம் வரை உதவி நிதி உள்ளது, இது உங்களுக்குத் தெரியுமா?, என்னைத் தேர்ந்தெடுங்கள், ஒரு வாய்ப்பு தாருங்கள், ஒரு மாற்றத்தைக் கொடுங்கள், நிச்சயம் நான் முன்னேற்றத்தைக் காட்டுகிறேன்”, என பிரச்சாரத்தில் பேசினார்.

பின்னர் அங்கிருந்து, அடுத்த கிராமத்திற்குச் சென்று தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார், இந்த வாக்குவாதத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: ''நீங்கள் எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாடு உங்களை விரட்டியடிக்கும்'' - வைகோ ஆவேசம்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details