தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

"ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் திருவாடானை" - தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு! - Thiruvadanai Archaeological Survey

சங்க காலம் முதல் திருவாடானைப் பகுதி வரலாற்றுச் சிறப்புடன் இருந்ததோடு, ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாகவும் திகழ்ந்துள்ளது என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தெரிவித்துள்ளார்.

மாணவர்களுடன் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு
மாணவர்களுடன் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு (Credits - ETV Bharat Tamil Nadu)

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தொல்லியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதுமட்டும் அல்லாது இந்த நிகழ்ச்சியில் நடந்த தொல் பொருட்கள் கண்காட்சியில், ராமநாதபுரத்தில் கிடைத்த பழைய, புதிய மற்றும் நுண் கற்காலக் கருவிகள்; கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள்; ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள்; இரும்புத்தாதுக்கள்; இரும்புக் கழிவுகள்; வட்டச் சில்லுகள்; பானைக் குறியீடுகள்; கல்வெட்டுகளின் மைப்படிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும், பாரம்பரியத்தை அறிய உதவும் தொல்லியல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகள் என்ற இரண்டு தலைப்புகளில் மாணவர்களிடம், வே.ராஜகுரு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திருவாடானைப் பகுதியில் வணிகர், வணிகக்குழு, அறுநூற்றுவர் என்ற வணிகக்குழு, பாதுகாவல் வீரர்கள் இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், அதிகளவு நெல் விளைச்சல், விவசாயத்துக்காக பாண்டியர்கள் மற்றும் சேதுபதி மன்னர்கள் உருவாக்கிய கண்மாய்கள், பெரிய ஆறுகள் குறுக்கிடாமை, இயற்கைத் தடைகள் இல்லாமை, இயற்கைத் துறைமுகங்கள், அதிகளவிலான வணிகப் பாதைகள், பாதுகாப்பு ஆகிய பல காரணங்களால் ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானைப் பகுதி திகழ்ந்துள்ளதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.

இதையும் படிங்க:சிந்து சமவெளி நாகரிகத்தைக் கட்டமைத்தவர்கள் திராவிட பழங்குடிகள் - தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தகவல்

இதுமட்டும் அல்லாது, இயற்கை சார்ந்த ஊர்ப் பெயர்கள், துறைமுகப் பட்டினங்கள் என சங்ககாலம் முதல் திருவாடானைப் பகுதி வரலாற்றுச் சிறப்புடன் இருந்துள்ளது. ஆகவே, உலக மொழிகளில் உள்ள தமிழின் தாக்கத்தை அறிந்து கொள்ள, தமிழ்த்துறை மாணவ மாணவியர் கல்வெட்டுகளில் உள்ள தமிழ் சொற்களை ஆங்கில சொற்களுடன் இணைத்து ஆய்வு செய்யவேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்விற்கு, கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் தலைமை தாங்க, முனைவர் க.அழகுராஜா முன்னிலை வகித்தார். மேலும் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தொல்லியல் துறை சார்ந்த தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details