தமிழ்நாடு

tamil nadu

பேராசிரியர்கள் போலி கணக்கு விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் நடந்தது என்ன? - fake professors issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 10:58 PM IST

fake professors issue: போலியாக ஆசிரியர்களை கணக்கு காண்பித்த விவகாரத்தில், 294 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில், உயர் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆப்பிரகாம், பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், சிண்டிகேட் உறுப்பினருமான பரந்தாமன் உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டனர். உயர்கல்வித்துறை செயலாளராக பதிவேற்றப்பின்னர் முதல் சின்டிக்கேட் கூட்டத்தில் பிரதீப்யாதவ் கலந்துக் கொண்டார்.

இந்த கூட்டத்தில், பிரகாஷ் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு கடந்த சிண்டிக்கேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவில்லை என ஏற்கனவே புகார் எழுப்பி இருந்தனர். இந்த நிலையில், சிண்டிகேட் ஒப்புதல் இல்லாமல் பதிவாளர் நியமனம் செய்யப்பட்டது தவறு என்பது குறித்தும், முறையாக பதிவாளர் நியமனம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதிக்கப்பட்டது.

அதன் பின்னர், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துக்களை பெற்று மீண்டும் சிண்டிகேட் குழுவை கூட்டி முடிவை எடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் பொறியியல் கல்லூரிகளில் அங்கீகாரம் பெறுவதற்கு போலியாக ஆசிரியர்களை கணக்கு காண்பித்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மோசடி செயலில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளின் செயலை அனுமதிக்க முடியாது எனவும், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சிண்டிகேட் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், மோசடி தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கை மிக விரைவாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரியின் விபரங்கள் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கும் மையத்தினால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 2023-24 கல்வியாண்டில் 91 பொறியியல் கல்லூரிகளில் 680 மேற்பட்ட ஆசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்துள்ளது தெரிய வந்தது.

அதேபோல் 2024-25 கல்வி ஆண்டில் 124 பொறியியல் கல்லூரிகளில் 800-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போலியாக கணக்கு காண்பித்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் வேந்தர் என்ற முறையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு பேராசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரியில் ஒரே கல்வி ஆண்டில் பணிபுரிவதாக அங்கீகாரம் பெறுவதற்கு பெயர் அளித்திருந்தால் அதுபோன்ற கல்லூரிகள் மற்றும் பேராசிரியர் விபரங்களையும் கண்டுபிடித்து அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் 294 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் போலி ஆசிரியர்கள் கணக்கு காட்டியது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, அண்ணா பல்கலை கழகத்தில் உள்ள சிண்டிகேட் அரங்கில் மதியம் 12 மணிக்கு துவங்கிய கூட்டம் மாலை 4 மணி வரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:போதைப்பொருள் விற்ற பணத்தில் கோடிக்கணக்கில் முதலீடு; ஜாபர் சாதிக்கின் மனைவி குறித்து அமலாக்கத் துறை பகீர் தகவல்! - jaffer sadiq case

ABOUT THE AUTHOR

...view details