தமிழ்நாடு

tamil nadu

மத்தியில் பிரதமராக யார் வந்தாலும் அதிமுக ஆதரவு ‘இவர்களுக்கு’ தான்.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குறிப்பிட்டது எதை? - Kadambur Raju about pm

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 6:34 PM IST

Kadambur Raju about pm: நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று யார் பிரதமராக வந்தாலும், மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு
''மத்தியில் பிரதமராக யார் வந்தாலும், தமிழர் நலன் காக்கும் அரசுக்கு அதிமுக ஆதரவளிக்கும்''

தூத்துக்குடி:திமுக ஆட்சியில் சமூக விரோதிகளால் காவல்துறையினர் தாக்கப்படுவதைப் பார்க்கையில், திமுக அரசு சமூக விரோதிகளுக்கு துணை போவது தெரிகிறது என கோவில்பட்டியில் இன்று (ஏப்.27) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக்கள் கோடை காலத்தில் தாகம் தணிப்பதற்காக நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, நீர், மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், பழரசம் உள்ளிட்ட உணவாகாரங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப, நிச்சயமாக நல்ல மாற்றத்திற்கு வாக்களித்திருப்பார்கள் என்று நம்புகிறோம். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் பழக்கம், மின் கட்டண உயர்வு, சொத்து வரி, உள்ளிட்டவைகளால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இவை எல்லாம் தேர்தலில் எதிரொலித்திருக்கும் என நம்புகிறோம்.

திமுக ஆட்சியில் சமூக விரோதிகளால் காவல்துறையினர் தாக்கப்படுவது, அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை எல்லாம் பார்க்கும் போது, திமுக அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த காவல்துறை, ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவைக் கைப்பற்றுவோம் என்று சசிகலா கூறுவது, நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக அறிக்கை விடுகிறார், அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்”, என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மாநில அரசு மத்திய அரசிடம் கேட்ட தொகையை வழங்கியதாக நடைமுறை இல்லை" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! - EPS ALLEGES DMK

ABOUT THE AUTHOR

...view details