திருப்பத்தூர்:புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கல்விக் குழுமத்தின் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று (பிப்.10) நடைபெற்றது. இதில் ஏராளமான பட்டதாரிகள் பங்கேற்று, வேலை வாய்ப்பினை பெற்றனர். அதனைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு பணிநியமன ஆணையை புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி.சண்முகம் பேசியதாவது, “தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் போன்ற இடங்களில், சமூக விரோதிகள் சிலர் போதைப் பொருட்களை விற்று வருகின்றனர். இவற்றைத் தடுக்கும் வகையில், வேலூர் நாடாளுமன்றத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் கிரிக்கெட், கபடி, வாலிபால் போட்டி மற்றும் போதைப் பொருட்கள் விழிப்புணர்வு குறித்து மாரத்தான் நடத்த உள்ளோம்.
புதிய நீதிக்கட்சி, தேர்தல் பணியை துவங்கி 6 மாதங்கள் ஆகிறது. மக்கள் சேவைக்காக வந்துள்ளோம். நடக்கவிருப்பது கவுன்சிலர், நகர்மன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் இல்லை, பிரதமர் தேர்தல். யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி திமுக மற்றும் அதிமுகவும் ஓட்டு கேட்பார்கள்? திமுக மற்றும் அதிமுகவால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாது.